காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சுங்க சாவடி முற்றுகை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சை மத்திய மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கசாவடியை முற்றுகையிட்டு வரி செலுத்தா போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை துவாக்குடி போலீசார் கைது செய்தனர்.

காவிரி ஆற்றில் வரும் தண்ணீர்,  தமிழக காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களையும், 16 மாவட்ட பொது மக்களின்  குடி நீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது  இந்நிலையில் உச்சநீதி மன்றம் தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் பகிர்ந்து அளிப்பதற்காக காவிரி மேலாண்மை வரியம் அமைக்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் உதாசினப்படுத்திய மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருவதோடு  போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சுங்கச் சாவடிகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்து அதன்படி தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் துவாக்குடி அருகே திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பின்னர் அந்த வழியாக வந்த வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டாமென துண்டு பிரசுரம் வழங்கினார்கள். மேலும் சுங்க கட்டணம் வசூலிக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் அன்புவெங்கடேஷ், காவிதாசன், அண்ணாதுரை உட்பட 70 கட்சித்தொண்டர்களை துவாக்குடி போலீசார் கைது செய்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply