திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றம்!

அனுமதி பெறாமல் திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் பெல் ‘பி’ செக்டர் பகுதியில், மகாபோதி பவுத்த சங்கம் சார்பில் சில நாட்களுக்கு முன்பு புத்தர் சிலை இரவோடு இரவாக நிறுவி புத்தர் சிலைக்கு பூஜை செய்தனர். இதைப் பார்த்த பெல் பாதுகாவலர்கள், பாய்லர் பிளாண்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய போலீசார், மகாபோதி பவுத்த சங்கத்தின் பொது செயலாளர் தேவேந்திரனை அழைத்து விசாரித்தனர்.

புத்தர் சிலை வைப்பது சம்மந்தமாக பெல் நிறுவனத்திடம் மனு அளித்ததாகவும், அந்த இடம் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட தெருப்பட்டி குளம் அருகே உள்ள இடம் பராமரிப்பு மட்டுமே பெல் நிர்வாகம் செய்து வருவதாகவும். அதனால் அந்த இடம் துவாக்குடி நகராட்சிக்கு சொந்தமானது என்று கூறிவிட்டதாகவும், அதனால் துவாக்குடி நகராட்சியிடம் அனுமதி கேட்டு கடந்த டிசம்பர் 11-ம் தேதி மனு அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார். அதன் அடிப்படையில் தான் புத்தர் சிலை வைத்ததாக தேவேந்திரன் கூறினார். 

இதுக்குறித்து துவாக்குடி நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவியிடம் கேட்டப்போது, மகாபோதி பவுத்த சங்கதினர் மனு கொடுத்துள்ளனர். அதனை சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும், அனுமதி கலெக்டர் தான் வழங்க வேண்டும் என்றார்.

இதற்கிடையில் அந்த இடம் துவாக்குடி நகராட்சியில் வராது என்றும், கூத்தைப்பார் பேருராட்சியில்தான் வரும் என்றும் தகவல் வெளியானது.

இது தொடர்பாக பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முக சுந்தரத்திடம் விபரம் கேட்டோம்.

புத்தர் சிலை வைப்பதற்கு முறையான அனுமதி வாங்காமல் இரவு நேரத்தில் புத்தர் சிலையை அமைக்க முயற்சித்தனர். மேலும், அந்த இடம் யாருக்கு சொந்தமானது என்ற விபரம் வருவாய்துறை ஆவணங்களைப் பார்வையிட்டால் தான் தெரியும். இதுகுறித்து திருவெறும்பூர் தாசில்தாருக்கு கடிதம் எழுதியுள்ளோம். அவர் ஆய்வு செய்து அறிக்கை  அளித்தால்தான் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

இதற்கிடையில் வருவாய்துறை அதிகாரிகள் புத்தர் சிலை அமைப்பது குறித்து எந்த முடிவான பதிலும் அளிக்காததால், பெல் நிர்வாகம் அங்கிருந்த புத்தர் சிலையை அதிரடியாக அகற்றியது.

இந்நிலையில் ‘சி’ செக்டர் பகுதியில் பெல் வளாகத்திற்கு வெளியே, பெருமாள் கோயிலுக்கும், சர்ச்க்கும் இடையில் வாய்க்கால் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையை அமைத்தனர். இது திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியாகும். 

இந்நிலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் வாய்க்கால் பகுதியில்  வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையைஇன்று காலை வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன், கிரேன் இயந்திரத்தின் உதவியுடன், அதிரடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply