விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனரை கிழித்து சேதப்படுத்திய வழக்கில் 3 பேர் மீது வழக்கு பதிவு!-சுவாமிமலை அருகே பதட்டம்.

சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பயத்தில் மறைந்த வழக்கறிஞர் ம.சங்கர் என்பவரது படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது.  

இதையொட்டி திருப்புறம்பயம் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதன் தலைவர் திருமாவளவன் விளம்பர பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில் திருப்புறம்பியம் தெற்கு வீதியை சேர்ந்த சுவாமிநாதன் மகன் பாஸ்கர் வயது 35 என்பவரும், சேகர் மகன் சக்திவேல் வயது 35 என்பவரும், இந்த பிளக்ஸ் பேனரை கிழித்ததாக சந்தேகமடைந்து  விடுதலை சிறுத்தை கட்சியினர் இருவரது வீடுகளையும் அடித்து சேதப்படுத்தி தாக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீசார், அந்த இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், திருமாவளவன் பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விடுதலை சிறுத்தை கட்சியின் கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் இரண்டு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை காவல் ஆய்வாளர் ஹேமலதா தலைமையிலான போலீசார் சாமிநாதன் மகன் பாஸ்கர் வயது 35  என்பவர் மீதும், சேகர் மகன் சக்திவேல் வயது 35 என்பவர் மீதும்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி கிளை செயலாளர் உத்தராபதி மகன் பாலகிருஷ்ணன் வயது 56 ஆகிய இரு தரப்பை சேர்ந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-நீலக்கண்ணன்.

Leave a Reply