தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் கீழே விழுந்து உயிரிழந்தார்!-ஏற்காடு அருகே நடந்த விபரீதம்.

சேலம் மாவட்டம், ஏற்காடு, பட்டிப்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னான் மகன் ஜெயராமன், வயது 41, இவருக்கு உமா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இவர் நேற்று காக்கம்பாடி கிராமத்தில் காமராஜ் என்பருக்கு சொந்தமான தோட்டத்தில் தேன் எடுக்க சென்றுள்ளார். எடுக்கும் தேனில் பாதி ஜெயராமனுக்கும், பாதி காமராஜ்க்கும் என இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை மரத்தில் ஏறி தேன் எடுக்கும் பணியை துவங்கியுள்ளார். சற்று நேரத்தில் ஜெயராமன் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். காமராஜ் மற்றும் சிலர் ஜெயராமனை தூக்கி கொண்டு தோட்டத்திற்கு வெளியே வந்துள்ளனர். அதற்குள் ஜெயராமன் உயிரிழந்து விட்டார்.

பின்னர் தகவலறிந்து வந்த ஏற்காடு காவல் துறையினர், ஜெயராமனின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இன்று காலை ஜெயராமனின் உறவினர்கள் மற்றும் அவரது கிராமத்தை சேர்ந்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், இழப்பீடு வேண்டும் என கோரி, ஏற்காடு காவல் நிலையத்தில் குவிந்தனர். பின்னர் அவர்களை ஏற்காடு போலீசார் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.

இன்று மதியம் ஜெயராமனின் உடலை, பிரேத பரிசோதனை முடித்து ஜெயராமனின் உறவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

-நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN May 19, 2020 11:30 pm

Leave a Reply