கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தில் சர்ச்சை!-இந்தியை திணிக்கத் திட்டமா?-தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் அறிக்கை.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன்.

தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணியை கோவை மாநகராட்சி தொடங்கியுள்ளது. பள்ளியில் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளை சேர்க்க கொடுக்கப்படும் விண்ணப்பத்தில் 18 விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது. அதில் 14 -ஆவது காளத்தில், மூன்றாவது மொழி (ஹிந்தி) எடுத்துக்கொள்ள விரும்புகிறாரா அல்லது கைத்தொழில் ஒன்றை அதிகப்படியாய் கற்றுக்கொள்ள விரும்புகிறாரா என்று கேட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்று தமிழக முதல்வர் அறிவித்து இருக்கின்ற நிலையில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையிலேயே ஹிந்தி படிக்க விரும்புகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு ஹிந்தியை திணிக்க தொடங்கி விட்டதா? கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்வி மத்திய அரசு புகுத்துகிற புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டதா? என்ற ஐயம் எழுகிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து இருக்கக்கூடிய நிலையில், அந்த குழு எந்த பரிந்துரையும் செய்யாத நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி விட்டதா?

ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை கோவை மாநகராட்சி உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் 20.08.2020 காலை 11 மணி அளவில் கோவை மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

இவ்வாறு தமது அறிக்கையில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply