தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணிக்கு, பிற துறைகளில் உதவியாளர்களாக பணியாற்றுபவர்களை பணி மாறுதல் அடிப்படையில் நியமிப்பதற்கான வயது வரம்பு பொருத்தமற்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், ஏராளமான பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வாய்ப்பை இழந்து வருகின்றனர்.

நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாமல், ஒருவரின் விருப்பமான பணி வாய்ப்பை பறிப்பது மிகவும் அநீதியானது ஆகும்; அந்த அநீதி போக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நீதித்துறை தவிர்த்து மீதமுள்ள துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழக அரசின் அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் பணியாற்றும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களில் இருந்து தகுதியானவர்கள் பணி மாறுதல் அடிப்படையிலான போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு நியமிக்கப்படுவதற்கான வயது வரம்பு பட்டியலினம்/ பழங்குடியினருக்கு 35 வயதாகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 30 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இது நியாயமற்றது.

தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு எவரும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, அப்பணிக்கான தகுதிகள் மிகவும் கடினமானவை. தமிழக அரசின் அமைச்சுப் பணியில் ஒருவர் சேர்ந்து, பட்டப்படிப்பை முடித்து, 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், 30 வயதுக்குள் இவை அனைத்தையும் சாதிப்பது சிறிதும் சாத்தியமற்றது ஆகும். தமிழக அரசின் அமைச்சுப் பணியில் 10-ஆம் வகுப்பு முடித்தவுடன் போட்டித் தேர்வு எழுதி சேர முடியும்.

அந்தப் பணியில் சேர குறைந்தபட்ச வயது 18. ஆனாலும், பட்டப்படிப்பு முடித்து 22 வயதைக் கடந்த பிறகு தான் அமைச்சுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை பலராலும் எழுத முடியும். அப்போட்டித் தேர்வை எழுதி, பணியில் சேரவே பலருக்கும் 28 முதல் 30 வயதாகி விடுகிறது. அவர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி புரிந்த பிறகு தான் தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு தகுதி பெற முடியும். அதற்கே ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 31 முதல் 33 வயது வரை ஆகியிருக்கும்.

அவ்வாறு இருக்கும் போது பட்டியலினம்/ பழங்குடியினர் தவிர மற்ற அனைவருக்கும் தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு அதிகபட்ச வயது 30 என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பது எந்த வகையில் நியாயம்? அதுமட்டுமின்றி, தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கான அடிப்படைத் தகுதியே அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பணியில் இருக்க வேண்டும் என்பது தான்.

அந்தப் பணியில் பட்டியலினத்தவர் 35 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயது வரையிலும், பொதுப்பிரிவினர் 30 வயது வரையிலும் சேர முடியும். அடிப்படைத் தகுதிக்கான பணியிலேயே ஒரு பிற்படுத்தப்பட்டவர்/மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 32 வயது வரை சேர முடியும் எனும் போது, அதைவிட கூடுதல் தகுதியும், கூடுதல் அனுபவமும் தேவைப்படும் பதவிக்கு குறைவான வயது வரம்பை நிர்ணயிப்பது சரியல்ல.

அவ்வாறு நிர்ணயிக்கப்படுவதால், 27 வயதுக்குப் பிறகு அமைச்சுப்பணி உதவியாளர் பணியில் சேருபவர்களுக்கு தலைமைச் செயலக உதவியாளர் பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது சமூக அநீதி. தமிழக அரசின் நான்காம் தொகுதி பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40-ஆகவும், முதல் தொகுதி பணிகளுக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தொகுதி பணிகளுக்கு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. இவ்வாறாக அனைத்து பணிகளுக்கு வயதுவரம்பு கூடுதலாக இருக்கும் போது, தலைமைச்செயலக உதவியாளர் பணிக்கு மட்டும் மிகவும் குறைவாக 30 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டும் தான் பணியில் சேர முடியும் என்பது நியாயமல்ல.

எந்தத் தொகுதி பணியாக இருந்தாலும் அதிகபட்ச வயது வரம்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு சில ஆண்டுகள் சலுகைகள் வழங்கப்படும். ஆனால், தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு மட்டும் அந்த சலுகை வழங்கப்படாதது சமூகநீதிக்கு எதிரான செயல் ஆகும். அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழக அரசின் எந்த ஒரு பணியும் நியாயமற்ற காரணங்களைக் காட்டி, தமிழக குடிமக்களுக்கு மறுக்கப் படக் கூடாது. எனவே, தலைமைச்செயலக உதவியாளர் பணிக்கு பணிமாறுதல் அடிப்படையிலான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்; அதன்மூலம் போட்டியை பரவலாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.வி.அனுசியா.

Leave a Reply