தேர்தல் மோதல் படுகொலையில் முடிந்திருப்பது வேதனையளிக்கிறது!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. சட்டமன்றத் தேர்தல் என்பது ஜனநாயகத்தில் நடைபெறும் ஒரு திருவிழா. அதில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெறுவதும் – ஆக்கபூர்வமான முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதும் மட்டுமே ஜனநாயகத்திற்கும், பொது அமைதிக்கும் வலு சேர்க்கும்.

இந்த நிகழ்வைப் பொறுத்தமட்டில் – தேர்தல் நேரத்தில் நடைபெற்ற மோதல், இப்போது இருவர் சாதிய வன்மத்துடன் கொலை செய்யப்பட்டுள்ள அவலத்தில் முடிந்திருப்பது கண்டனத்திற்குரியது. கொலை செய்யப்பட்ட இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் – எங்கும் – யாராலும் பொது அமைதிக்குப் பங்கும் விளைந்து – பொதுமக்களின் நிம்மதியைக் குலைக்கும் நடவடிக்கைகள் அரங்கேற அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

எத்தனை கருத்து மோதல்கள் தேர்தல் களத்தில் இருந்தாலும் – தேர்தலோடு அவற்றை மறந்து விட்டு – தமிழக மக்கள் அனைவரும் சகோதரர்களாக – சமூக நல்லிணக்கத்துடன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

எனவே, தமிழகக் காவல்துறைத் தலைவர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு – மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் அவரவர் பகுதிகளில் சட்டம் – ஒழுங்குப் பணிகளை நிலைநாட்டுவதில் எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என்றும் – சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து – கைது செய்து – சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

அரக்கோணம் பகுதியில் அர்ஜூன், சூர்யா என்ற இரு தலித் இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இவர்களோடு தாக்குதலுக்கு உள்ளான இரண்டு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாதீய வன்மத்தோடு நடைபெற்றுள்ள இப்படுகொலையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கறது.

அரக்கோணத்தை அடுத்த சோகனுர் கிராமத்தைச்சார்ந்த அர்ஜீன், சூர்யா, மதன், வல்லரசு, சவுந்தராஜன் ஆகிய தலித் இளைஞர்களை, பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள், நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டதாகவும், நாங்கள் திமுக கூட்டணிக்குத்தான் வாக்களித்தோம் என்று பதிலளித்துள்ளனர். இதனையொட்டி இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மேற்கண்ட இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இரு கிராமத்தில் இருந்தவர்களுக்கிடையில் சில பிரச்னைகள் இருந்தாகவும் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே சாதீய வன்மத்துடன் இந்தப் படுகொலை நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் பெருமளவு அமைதியாக நடந்துள்ள சூழ்நிலையில், அரக்கோணத்தில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அராஜக நடவடிக்கைகளுக்கு நாகரிக மக்கள் சமூகம் ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது.

படுகொலை செய்யப்பட்ட அர்ஜூன், சூர்யா ஆகியோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு தலா ரூபாய் 50 லட்சமும், படுகாயமடைந்த குடும்பத்திற்கு தலா ரூபாய் 20 லட்சமும் நிவாரணமாக வழங்க வேண்டுமென வுற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக காவல்துறையையும் தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.

தற்போது அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் அமைதிகாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று அரக்கோணம் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் தகராறில் படுகொலை செய்யப்பட்ட நபர்களின் குடுமபத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

எம்.பிரபாகரன், திவாஹர்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply