வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவோம்!-சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ஆவது நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா முழுவதும் உள்ள உழவர் பெருமக்களின் உணர்வுகளையும், விருப்பத்தையும் இந்த மன்றம் முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய வகையில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த அவையிலே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு தெளிவாக முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது என்றார்.

ஆனால், இந்த அவையினுடைய முதல் கூட்டத் தொடர் என்ற முறையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, இத்தகைய தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, அந்த உரிய தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார்.

அதேபோல், ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டமும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து, அவர்களிடத்திலே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அதனையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தையும் வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

-கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply