சத்தியம் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர் மீது வழக்கு பதிவு!

சத்தியம் தொலைக்காட்சி தலைமை அலுலகத்திற்கு நேற்று (03.08.2021 ) மாலை 7 மணி அளவில் காரில் வந்த நபர் ஒருவர், அத்துமீறி உள்ளே நுழைந்து அலுவலக வரவேற்பு அறையில் அமைக்கப்பட்டிருந்த மேஜை, கண்ணாடி, தொலைக்காட்சிப் பெட்டி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை தன் கையில் வைத்திருந்த பட்டாகத்தி போன்ற கூர்மையான வாள் மற்றும் தடுப்பு கவச ஆயுதம் கொண்டு தாக்கினான்.

இதையடுத்து, கதவின் கண்ணாடியை உடைத்து அலுவலக அறைக்குள் நுழைந்த அந்த நபர், சத்தியம் தொலைக்காட்சி நிர்வாக மேலாளர் இருந்த அறைக் கதவையும் உடைத்து மிரட்டல் விடுத்தான். தடுக்க முயன்ற ஊழியர்களை மிரட்டியதோடு; பட்டாகத்தி போன்ற கூர்மையான வாள் கொண்டு ர்களை தாக்கவும் முற்பட்டான்.

இதையடுத்து, சத்தியம் தொலைக்காட்சி நிர்வாகத்தின் சார்பில், சென்னை ராயபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்; வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், சத்தியம் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர் பெயர் ராஜேஷ்குமார் என்றும், இவர் கோயம்புத்தூர் மாவட்டம், உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த செய்தி பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக; உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக, இன்று (04.08.2021) மாலை 5:13 மணியளவில் சென்னை, ராயபுரம் காவல்நிலையத்தை நாம் தொடர்பு கொண்டோம். சத்தியம் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர் மீது வழக்கு பதிவு (Crime No: 1100/2021) செய்து கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இத்தகைய அசம்பாவித சம்பவத்திற்கு உண்மையான காரணம் என்ன?! என்பதை தெரிந்துகொள்வதற்காக; சத்தியம் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்தை இன்று (04.08.2021) மாலை 5:25 மணியளவில் நாம் தொடர்பு கொண்டு விபரம் கேட்டோம்.

இது சம்மந்தமான முக்கிய நபர் செய்தி சேகரிப்பில் இருப்பதாகவும், அவர் வந்தவுடன் நம்மை தொடர்பு கொள்வதாகவும் நம்மிடம் தெரிவித்தனர்.

-Dr.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply