உறவினர் இறப்புக்கு வந்த நபர்; திருச்சி ஓயாமரி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மாயம்!-தேடுதல் பணி தீவிரம்.

மதுரை, ஆரப்பாளையம், மேல பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன், திருச்சியில் உறவினர் ஒருவர் இறந்து விட்டார் என்பதற்காக, சுமார் 20-க்கும் மேற்பட்ட தனது உறவினர்களுடன் சேர்ந்து நேற்று (16.12.2021) திருச்சி வந்துள்ளார்.

துக்க காரியத்தில் கலந்து கொண்டு இறந்தவர் உடலை எரியூட்டுவதற்காக நேற்று (16.12.2021) மாலை உறவினருடன் சேர்ந்து ஓயாமரி சுடுகாட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு காவிரி ஆற்றில் அனைவரும் கும்பலாக குளித்துள்ளனர்.

குளித்து முடித்து அனைவரும் கரைக்கு வந்து பார்த்தபோது நாகராஜன் உடுத்திருந்த ஆடைகள் மட்டும் அனாதையாக கிடந்தது கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகுதான் காவிரி ஆற்று நீரில் மூழ்கி நாகராஜன் மாயமானது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. நாகராஜன் உள்பட நாகராஜனோடு ஆற்றில் குளித்த அனைவருமே மதுபோதையில் இருந்ததுதான் இந்த துயர சம்பவத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.

அதன் பிறகு நாகராஜன் காவிரி ஆற்றில் மூழ்கி மாயமானது குறித்து காவல்துறைக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

நேற்று (16.12.2021) இரவு நேரம் ஆகிவிட்டதால் உடனே தேடுதல் பணியை தொடங்க முடியவில்லை. இந்நிலையில், இன்று (17.12.2021) காலை முதல் தேடுதல் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஈடுபட்டனர். ஆனால் இன்று மாலை 6 மணி வரை தேடியும் காவிரியாற்றில் மாயமான நாகராஜனின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது இரவு நேரம் ஆகிவிட்டதாலும், காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாலும் தேடுதல் பணியை நாளை காலை தொடர தீயணைப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply