கோயம்புத்தூரில் 5 நாள் புகைப்படக் கண்காட்சி!

இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மக்கள் தொடர்பு கள அலுவலகம் – கோயம்புத்தூர் சார்பில், 5 நாள் புகைப்படக் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரான் தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் அஞ்சல் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ஐசிடிஎஸ்) அரங்குகளும் இடம்பெற்றிருந்தன.

நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட, போராடிய ஆனால் மக்களால் பிரபலமாக அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும் இதனை கண்டுகளித்தனர்.

அஞ்சல் துறை அரங்கில் இடம் பெற்றிருந்த ஆதார் மற்றும் அஞ்சல் துறை வங்கி அரங்குகள் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்தன. ஐ சி டி எஸ் அரங்கில் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வுக் கண்காட்சி இடம்பெற்றிருந்தது.

கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் திரு சமீரான், மகாத்மா காந்தி, நேதாஜி, சர்தார் பட்டேல் போன்ற பெரும் தலைவர்கள் மற்றும் 1800 களிலிருந்து நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களின் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்றார். இவற்றை மாணவர்கள் பார்வையிட்டு வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல பத்திரிகை தகவல் அலுவலகம், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை, மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை மூலம் ஓராண்டு காலத்திற்கு 75 ஆவது சுதந்திர ஆண்டுப் பெருவிழாவையொட்டி பல்வேறு துறைகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகக் கூறினார். இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அதிகம் அறியப்படாத அதேசமயம் நாட்டு விடுதலைக்கு பங்காற்றியத் தலைவர்களைப் பற்றி அறியச் செய்வதற்கு இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆனால் சுதந்திரத்தை சாத்தியமாக்குவதற்காக பாடுபட்டவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஒருவராவது இருந்திருப்பார். ஆர்வம் உள்ளவர்கள் அப்படிப்பட்ட தலைவர்களையும் அறிந்து அவர்கள் பற்றிய தகவல்களையும் வெளிக்கொணர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் – கோயம்புத்தூர் துணை இயக்குநர் கரீனா தெங்கமம் வரவேற்றுப் பேசினார். மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கள கண்காட்சி அலுவலர் ஏ ஆர் வித்யா நன்றி கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply