போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்!– பொதுமக்களுக்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேண்டுகோள்.

பொங்கல் பண்டிகையின் முதல் நிகழ்ச்சியாக, போகி பண்டிகை  நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பழைய  பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு போகிப் பண்டிகையின் போது எழுந்த புகை மூட்டம் காரணமாக சென்னை விமான நிலைய ஓடுதளம் தெரியாத அளவிற்கு புகை பரவியதால், 118 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை பாதிக்கப்பட்டு விமானப் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் சென்னை விமான நிலைய   மக்கள் தொடர்பு அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.   எனினும் 2019, 2020 &2021 ஆம் ஆண்டுகளில் சென்னை விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்ட வழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக போகிப் பண்டிகையால் ஏற்படும் புகை மூட்டப் பாதிப்பு குறைந்ததாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

அதே போன்று இம்முறையும், போகிப் பண்டிகையின்போது விமானை நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள், பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பதைத் தவிர்த்து விமானப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது போன்று பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டம் விமான நிலைய ஓடுதள புலப்பாட்டை பாதிப்பதோடு பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply