“உக்ரைனிலிருந்து 90 சதவீத மாணவர்கள் மீட்பு , கடைசி மாணவரை மீட்கும் வரை பணி தொடரும்!- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

பிரதமரின் bharathiya janaushadhi kendra திட்டம் சார்பில் ‘ மக்கள் மருந்தகங்கள் ‘ மூலமாக நடைபெற்று வரும் ஒரு வாரகால சிறப்பு மருத்துவ முகாமை சென்னை சவுகார்பேட்டையில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணை அமைச்சர் எல் முருகன் இன்று நேரில் பார்வையிட்டார்.

மேலும் அங்கு வந்திருந்த பயனாளிகளுடன் கலந்துரையாடிய பின்பு, மக்கள் மருந்தகத்துக்குள் சென்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பயனாளிகளுக்கு அமைச்சர் விநியோகித்தார்.

நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எல் முருகன்,

” மத்திய அரசின் மக்கள் மருந்தகங்கள் மூலம் , மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

ஏழைகளுக்கு தரமான மருந்துகள் , குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே இந்த மக்கள் மருந்தகங்களின் நோக்கம்.

இந்தியா முழுவதும் 36 மாநிலங்களில், 8675 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது.

மக்கள் மருந்தகம் மூலம் 1451 வகையிலான மருத்துகளும் , 240 க்கும் மேல் அறுவை வசிகிச்சை உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் , தனிநபர் கழிவறைத் திட்டம் , இலவச எரிவாயு இணைப்பு, ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் தமிழகத்தில்தான் அதிகளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முத்ரா வங்கிக் கடன், விவசாயிகளுக்கான 6000 நிதியிதவித் திட்டமும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

உக்ரைனிலிருந்து 90 சதவீதம் பேர் மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடைசி மாணவரை மீட்கும் வரை மீட்பு பணி தொடரும். இதற்காக

4 மூத்த அமைச்சர்கள் கடும் பனியிலும் களத்தில் உள்ளனர்.

உக்ரைனிலிருந்து 15 ஆயிரம் மாணவர்கள் வரை மீட்கப்பட்டுள்ளனர். மாணவர்களை சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்த நீட் அவசியம். தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரி திறப்பினால் இந்த ஆண்டு 5 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தகுதித் தேர்வு என்பது அனைத்து படிப்பு மாணவர்களுக்கும் இருக்கிறது.

மேகதாது திட்டம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான முறையில் பேசி தீர்வு காணப்படும். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் சாத்தியம் என்பதாலேயே அதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்கள் திட்டம் தொடர்பான விளக்க அறிக்கை (DPR) தந்தவுடன் மத்திய அரசு இந்தத் திட்டத்தை தொடங்கும் என அமைச்சர் முருகன் குறிப்பிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply