வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அளித்து இருக்கின்ற விளக்கம்
அன்புள்ள வைகோ அவர்களுக்கு,
16.12.2021 அன்று தாங்கள் எழுதிய கோரிக்கை விண்ணப்பம் கிடைக்கப் பெற்றேன். இந்திய உணவுக் கழத்திற்குச் சொந்தமான, சத்தியமங்கலம் இணைப்புச் சாலையில் இருந்து, கோவை கணபதியில் உள்ள அவர்களுடைய கிட்டங்கிக்குச் செல்கின்ற சாலையை, முறையான பராமரிப்பு மேற்கொள்வதற்காக, கோவை மாநகர் ஆட்சி மன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு இருக்கின்றீர்கள்.
இதுகுறித்து ஆய்வு செய்தேன். 1.5 கிலோமீட்டர் நீளம், 100 அடி அகலம் உள்ள அந்தச் சாலையின் மொத்த நிலப்பரப்பு 11.30 ஏக்கர் ஆகும். அதன் வழியாக, கோவை பீளமேட்டில் உள்ள அவர்களுடைய கிட்டங்கி மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த நிலத்திற்கான சொத்து வரியை, இந்திய உணவுக் கழகம், கோவை மாநகர் ஆட்சி மன்றத்திற்குச் செலுத்தி வருகின்றது.
அந்த இடத்தின் உரிமையை விட்டுத் தர இயலாது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும்கூட, கோவை மாவட்ட இந்திய உணவுக் கழகத்தின் மண்டல மேலாளர், கோவை மாநகர் ஆட்சி மன்றத்துடன் இதுகுறித்துப் பேச வேண்டும் என்றும், அந்தச் சாலையைப் பராமரிக்கவும், கழிவு நீர்க் குழாய்கள் அமைப்பதற்கும், தெரு விளக்குகள் நிறுவிடவும், கோவை மாநகர் ஆட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தால், அதைக் கேட்டுப் பெறவும், வழிகாட்டி இருக்கின்றோம். அதற்காக, அந்த இடத்தைக் கையகப்படுத்துவதாக இருந்தால், அதற்கு உரிய இழப்பு ஈட்டை, இந்திய உணவுக் கழகத்திற்குத் தர வேண்டும்
இவ்வாறு, அமைச்சர் பியுஷ் கோயல், விளக்கம் அளித்து இருக்கின்றார்.
xxxxxxxxxxxxx
ரயில்வே (தொடரித்துறை) அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்
அன்புள்ள வைகோ,
12.08.2021 அன்று தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்தை, கேரளத்தின் கொச்சி துறைமுகத்துடன் இணைப்பதற்காக, புதுக்கோட்டை, வல்லநாடு, திருநெல்வேலி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், செங்கோட்டை வழியாக புதிய தொடரித் தடம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருக்கின்றீர்கள்.
இதுகுறித்து ஆய்வு செய்தேன். தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்கள், திருநெல்வேலி, செங்கோட்டை, கொல்லம் வழியாக, ஏற்கனவே இணைக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி, செங்கோட்டைக்கு இடையே, ஏற்கனவே தொடரித் தடம் உள்ளது. மேலும், திருநெல்வேலி, நாகர்கோவில் வழித்தடம், இரட்டைத் தடமாக ஆக்குகின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் நிறைவு பெற்றால், பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மேலும் விரைவு பெறும்.
இவ்வாறு, அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விளக்கம் அளித்து இருக்கின்றார்.
–எஸ்.திவ்யா