தமிழக ஊர்க்காவல் படை வீரர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.

தமிழ்நாட்டின் காவல்துறைக்குத் துணையாக, ஊர்க்காவல் படை வீரர்கள் சுமார் 16000 பேர் பணிபுரிந்து வருகின்றார்கள். இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 560 வீதம் மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு, மாத ஊதியமாக ரூபாய் 2800 மட்டுமே வழங்கப்படுகின்றது.

ஐந்து நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை.இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏழை எளிய நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இது குறித்த வழக்கில், இவர்களுக்கு மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.அதன்படி, பல மாநிலங்களில் மாதம் முழுவதும் பணி வழங்கி, 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் வரையிலும் மாத சம்பளம் வழங்கப்படுகின்றது. பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை இரண்டாம் நிலை காவலராக பணி நிரந்தரம் செய்து இருப்பதைப் போன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 16,000 ஊர்க்காவல் படை வீரர்களின் கோரிக்கைகளை கருணையோடு பரிசீலனை செய்து, நிறைவேற்றித் தர வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply