2021-22 நிதியாண்டில் எஃகு பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவினங்களை (கேபெக்ஸ்) ஆய்வு செய்யவும், நடப்பு ஆண்டிற்கான கேபெக்ஸ் இலக்குகளை அடைவதற்கான திட்டங்களை மதிப்பிடுவதற்கான கூட்டம் மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது.
செயில், என்எம்டிசி, ஆர்ஐஎன்எல், கேஐஓசிஎல், எம்ஓஐஎல் மற்றும் மேகான் ஆகிய மத்திய எஃகு பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள், எஃகு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
எஃகு உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கும், பழைய ஆலை உபகரணங்களை நவீனமயமாக்குவதற்கும், எதிர்காலத்திற்கான சுற்றுச்சூழல் திறன்மிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கும் சரியான நேரத்தில் மூலதனச் செலவினங்களின் முக்கியத்துவத்தை எஃகு அமைச்சர் வலியுறுத்தினார்.
இத்தகைய செலவுகள் இந்தியப் பொருளாதாரத்துக்கும் ஊக்கம் தருகிறது. 2021-22 நிதியாண்டில் மத்திய எஃகு பொதுத்துறை நிறுவனங்களின் கேபெக்ஸ் செலவு ரூ 10,038 கோடி ஆகும். 2020-21 நிதியாண்டில் ரூ 7266.70 கோடியை விட 38% இது அதிகமாகும்.
2022-23 நிதியாண்டுக்கான கேபெக்ஸ் இலக்கு மத்திய எஃகு பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் ரூ 1,3156.46 கோடி ஆகும். மாதாந்திர கேபெக்ஸ் திட்டங்களைக் கடைப்பிடிக்கவும், காலக்கெடுவைச் செயல்படுத்துதல் மற்றும் வருடாந்திர இலக்கை சரியான நேரத்தில் வெற்றிகரமாக அடைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் நிறுவனங்களை மத்திய எஃகு அமைச்சர் அறிவுறுத்தினார்.
2022-23 நிதியாண்டிற்கான கேபெக்ஸ் இலக்குகள் அடையப்படும் என்று மத்திய எஃகு பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தின் போது உறுதியளித்தனர்.
–திவாஹர்