ஆளுநர் மீதுமா அடக்குமுறை?- தமிழ்நாடு பாஜக தலைவர் K. அண்ணாமலை கேள்வி ?

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..

அனைவருக்கும் வணக்கம்.
திமுக கட்சியின், எல்லாவற்றையும் எதிர்க்கும் எதிர்மறை சித்தாந்தம், கட்சித் தலைவராக அவர் கண்களை மறைத்து விடுகிறது. இதனால், நடுநிலையாக, எந்தவிதச் சார்புகளும் இல்லாமல், மக்கள் நலத்திற்கான முதலமைச்சர் என்ற கடமையை அவரால் சரியாகச் செய்ய முடியவில்லை.

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரிலே, கலவரத்திற்குத் திட்டமிடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாடிக்கை. கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் என்ற பெயரிலே, கொடி கட்டி வந்த கம்பால் அடிப்பதும், கொடிக் கம்பங்களை வீசுவதும், கொடியில் மறைத்து எடுத்து வந்த கற்களை வீசித் தாக்குவதும் திமுகவிற்குக் கைவந்த கலை.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரை, மதுரை தெற்கு வாசலில், பெண்ணென்றும் பாராமல், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் கற்களை வீசித் தாக்கியதும், ரத்தம் வடிய நின்றபோது, அவர் பெண்மையைக் கேலி செய்து பேசியதும், திமுகவின் சரித்திர சாதனைகளில் ஒன்று.

தமிழ்நாட்டின் ஆளுநரைத் தாக்குவதற்கு தமிழக காவல்துறை எப்படி அனுமதிக்கிறது? அதுவும் ஆளுநரின் வாகனம் செல்லும் சாலையின் ஓரத்தில் நின்று கற்களையும் கம்பையும் வீசும் தொலைவிலே போராட்டத்தை நடத்த எப்படி அனுமதி அளிக்கப்பட்டது?

தமிழ்நாட்டில் தொடர்ந்து, பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் கவலை அளிக்கிறது. காவல்துறை இந்தக் குற்றச்செயலை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மாநிலத்தின் ஆளுநரே தாக்கப்பட்ட பிறகு, இப்போதுதான் புரிகிறது, காவல்துறையே முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லையோ என்று. நமக்குத்தான் தெரியுமே திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவல்துறை, திமுக மாவட்டச் செயலாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.

ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கலந்து கொள்ளவிருந்த தருமை ஆதீனத்திற்கு, நேரில் சென்ற திமுகவினர், நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். தருமை ஆதீனத்தின் நிகழ்ச்சிகளில், தமிழக ஆளுநர், கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பண்டைத் தமிழ் மரபுகளையெல்லாம் கட்டிக்காக்கும் மூத்த சைவ ஆதீனத்தின் ஆகம மரபுகளில் அரசியல் தலையீடுகள், குறுக்கீடுகள் இருக்கலாமா? இதுவா திமுகவின் மத நல்லிணக்கம்? தமிழகத்தில் என்ன மாதிரியான ஆட்சி நடக்கிறது?
நம் மாநிலத்தின் ஆளுநரைத் தாக்கத் துணிந்து, அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அவரின் கட்சி தொண்டர்கள் தலைமையின் உத்தரவின் பேரில்தான் செயல்பட்டார்களா?

இன்று நம் மேதகு ஆளுநருக்கு மயிலாடுதுறையில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு, மாநில அரசே முழுப் பொறுப்பு! தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இந்த ஆட்சியில் எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை இந்தத் தாக்குதல் சம்பவம், எடுத்துக்காட்டுகிறது. இப்படி, தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், சாமானிய மக்களுக்கும் இந்த ஆட்சியில் எப்படிப்பட்ட பாதுகாப்பு கிடைக்கும் என்று அச்சப்பட வேண்டிய நிலையில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.

தொடர்ந்து தமிழக ஆளுநர்மீது ஆளும் கட்சியினரும் அதன் தலைமையும், வெளிப்படுத்தும் வெறுப்பும், எதிர்ப்பும், நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு, உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேதகு தமிழக ஆளுநர்மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு பாஜகவின் சார்பில் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது மாநிலத்தின் வளம் கருதி, மக்களின் நலம் கருதி, தமிழக முதல்வர் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்வார் என நம்புகிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply