கடற்படை தளபதியின் செசில்ஸ் பயணம்!

தென்மேற்கு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், செசில்ஸ் சென்றுள்ளார். ஏப்ரல் 21 முதல் 23 வரை அவர் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, செசில்ஸ் அதிபர் திரு சில்வஸ்டர் ராடேகொண்டே, வெளியுறவு அமைச்சர் பிரிகேடியர் மிக்கேல் ரோசெட்டே, பாதுகாப்பு படை தளபதி ஆகியோரைச் சந்தித்தார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் பற்றியும் அவர்களுடன் கடற்படை தளபதி விவாதித்தார். இருதரப்பு நீர்நிலைப் பரப்பாராய்ச்சி ஒத்துழைப்பு  குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் தேசிய நீர்நிலைப் பரப்பாராய்ச்சி அலுவலகம் தயாரித்த விக்டோரியா துறைமுகத்தின் கடல்வழி விளக்கப்படத்தை கடற்படை தளபதி வழங்கினார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இருநாடுகளுக்கும் உள்ள ஒத்துழைப்பு அணுகுமுறையைப் பாராட்டிய தளபதி, கோவா கடல்சார் மாநாடு, மிலன் மற்றும் இந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு ஆகியவற்றில் செசில்ஸ் கலந்து கொண்டதை வரவேற்றார். 2022 பிப்ரவரி மாதம் விசாகப்பட்டணத்தில் நடந்த மிலன்-22 கருத்தரங்கில் செசில்ஸ் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

திவாஹர்

Leave a Reply