முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்காவை நேரில் சந்தித்த துரை வைகோ!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மனைவி துர்காவை மதிமுக பொது செயலாளர் வைகோ மகன் துரை வைகோ மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள திருவெண்காட்டில் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

முன்னதாக துரை வைகோவை துர்கா ஸ்டாலின் இன்முகத்துடன் வரவேற்றார்.

அப்போது வைகோவின் உடல் நலன் குறித்து துர்கா ஸ்டாலின் துரை வைகோவிடம் விசாரித்தார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல் நலன் குறித்து துர்காவிடம் துரை வைகோ கேட்டறிந்தார்.

தென்மாவட்டங்களுக்கு வரும்போது எங்கள் கலிங்கப்பட்டிக்கு வாருங்கள் என்று துர்கா ஸ்டாலினுக்கு, துரை வைகோ அழைப்பு விடுத்தார்.

ஏற்கனவே, உதயநிதி குழந்தையாக இருக்கும்போது நான் கலிங்கப்பட்டி வந்திருக்கிறேன். அப்பா, அம்மா என்னை மிகுந்த ஆர்வமுடன் வரவேற்றனர். உங்கள் பாட்டி மாரியம்மாள் கை பக்குவத்தில் அசைவ உணவு சமைத்து பரிமாறினார். சனிக்கிழமையன்று நான் வழக்கமாக அசைவ உணவு உட்கொள்ளும் வழக்கம் இல்லை. ஆனாலும், நான் வருகிறேன் என்றதும், அவர் ஆசையாகச் சமைத்த உணவை பாட்டி மாரியம்மாளுக்காக அன்று நான் உட்கொண்டேன் என்று பழைய நினைவுகளை துர்கா ஸ்டாலின் துரை வைகோவிடம் பகிர்ந்து கொண்டார்.

இச்சந்திப்பின் போது திமுகவைச் சேர்ந்த சீர்காழி கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.தேவேந்திரன், கிளைச் செயலாளர் டைலர் துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

துரை வைகோவுடன் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன், நாகை மாவட்டச் செயலாளர் இராமனஞ்சேரி ஸ்ரீதர், மதுரை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சுப்புராஜ், வழக்கறிஞர் செந்தில்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

-கே.பி.சுகுமார்.,B.E.,
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply