வைசாகா புத்த பூர்ணிமாவை முன்னிட்டு மே 16, 2022 அன்று அரசு முறை பயணமாக லும்பினி செல்ல உள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, லும்பினி துறவிமட மண்டலத்தில் தனித்துவம் வாய்ந்த புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்தின் கட்டமைப்பு விழாவான “ஷிலன்யாசில்” கலந்து கொள்வார். லும்பினியில் உள்ள புனித மாயாதேவி ஆலயத்திற்குச் செல்லும் பிரதமர், அங்கு பிரார்த்தனை செய்வார். நேபாள அரசின் ஆதரவுடன் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்த ஜெயந்தி விழாவிலும் பிரதமர் உரையாற்றுவார்.
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் நிதி ஆதரவோடு, லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளையின் உதவியோடு சர்வதேச புத்த கூட்டமைப்பால் தனித்துவம் வாய்ந்த ‘புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையம்’ கட்டமைக்கப்படும். சர்வதேச புத்த கூட்டமைப்பு என்பது கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஓர் அமைப்பாகும். நேபாளத்தின் முதலாவது நிகர பூஜ்ஜிய வெளியீட்டு கட்டிடமாக இந்த புத்த மையம் விளங்கும்.
மேலும் வைசாக புத்தபூர்ணிமா கொண்டாட்டமாக புதுதில்லியில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுக்கு சர்வதேச புத்த கூட்டமைப்புடன் இணைந்து கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. காலை, நேபாளத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டும் விழா அப்போது திரையிடப்படும்.
மதியம் 2 மணிக்குத் துவங்கும் இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் கிரண் ரிஜிஜூ சிறப்பு விருந்தினராகவும், மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநில வளர்ச்சி அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கௌரவ விருந்தினராகவும், கலாச்சார இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொள்வார்கள்.
திவாஹர்