ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில் தென் கொரியா தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது.
இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடந்த இத்தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. இந்த சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த மலேசியா, ஜப்பான், கொரியா, இந்தியா சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. மீண்டும் ரவுண்டு ராபின் முறையில் நடந்த இந்த சுற்றின் கடைசி ஆட்டத்தில் கொரியாவுடன் டிரா செய்த இந்தியா பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. மலேசியா, கொரியா, இந்தியா தலா 5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், கோல் வித்தியாச அடிப்படையில் மலேசியா, கொரியா இறுதி போட்டிக்கு நுழைந்தன.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தென் கொரியா 2-1 என்ற கோல் கனக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மலேசியா வெள்ளிப் பதக்கம் பெற்றது.முன்னதாக, 3வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் மோதின.
6வது நிமிடத்திலேயே இந்திய வீரர் பால் ராஜ்குமார் அதிரடியாக ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். அதன் பிறகு நடந்த 54 நிமிட ஆட்டத்தில் கோல் ஏதும் விழாததால், இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 3வது இடம் பிடித்த மனநிறைவுடன் நாடு திரும்புகிறது.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆண்கள் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்கள் கார்த்தி செல்வம், மாரீஸ்வரன் சக்திவேல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் கோல் போட்டும் அசத்தியுள்ளதால் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
–எம்.பிரபாகரன்