கோவை, தஞ்சாவூர், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பதக்கங்கள், பாராட்டுப் பத்திரங்ககளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.6.2022) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுப் பத்திரங்களையும் வழங்கி சிறப்பித்தார். மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை” என மாற்றம் செய்துள்ளது. பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் போன்றவர்களின் நலனை காத்திடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்டங்களுக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள், பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட பெருமுயற்சிகள் மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி சிறப்பாக செயலாற்றிய கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்களுக்கு தங்கப் பதக்கமும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., அவர்களுக்கு வெள்ளிப் பதக்கமும், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபுசங்கர், இ.ஆ.ப., அவர்களுக்கு வெண்கலப் பதக்கமும் மற்றும் பாராட்டுப் பத்திரங்களையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply