ஜூலை – 3 அன்று நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு !- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

ஜூலை 3ம் தேதி நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘உள்ளாட்சியிலும் நல்லாட்சி’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, பொறுப்பேற்றுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு,கழக முதன்மைச் செயலாளரும் – நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில், திமுக தலைவரும் -தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 03.07.2022 அன்று (ஞாயிறு), காலை 9:30 மணி முதல் மாலை 5.00 மணிவரை நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, பொம்மகுட்டை, நாமக்கல்லில் நடைபெறும். இந்த மாநாட்டில், பல்வேறு தலைப்புகளின் கீழ் பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.

கழகத்தின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புதிதாகத்தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர், துணை மேயர் – நகராட்சித் தலைவர்கள்,துணைத் தலைவர்கள் – பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் – நகர்ப்புறஉள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் இணைக்கப்பட்டுள்ள அனுமதி பேட்ஜ் பெற்று, இம்மாநாட்டில் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.கார்த்திகேயன்

Leave a Reply