மேட்டூர் அணை உபரி நீரை, பனமரத்துப்பட்டி ஏரியில் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டத்தின் பனமரத்துப்பட்டி ஏரிக்கு மேட்டூர் அணை உபரி நீரை கொண்டுவந்து சேலம் நகரம், ராசிபுரம், மல்லூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள ஏரிகள், குளங்கள், வேளாண் நிலங்களை செழிக்க வைக்க வேண்டும். மேட்டூர் அணை உபரி நீரை, பனமரத்துப்பட்டி ஏரியில் நிரப்பினால், சேலம் மாநகராட்சி, ராசிபுரம் நகராட்சி, பனமரத்துப்பட்டி, மல்லூர் பேரூராட்சி, பெரமனூர், பள்ளித்தெருப்பட்டி, திப்பம்பட்டி, அம்மாபாளையம், சந்தியூர், எஸ். ஆட்டையாம்பட்டி, மூக்குத்திபாளையம், வாழகுட்டப்பட்டி, ஏர்வாடிவாணியம்பாடி, கெஜ்ஜல்நாயகன் உள்ளிட்ட, 15 கிராம பஞ்சாயத்துக்கும் குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.பனமரத்துப்பட்டி ஏரி உபரி நீர், அம்மாபாளையம் ஏரி, மல்லூர் ஓட்டேரி, மூக்குத்திபாளையம் ஏரி, வாழகுட்டப்பட்டி பெரியேரி, ஏர்வாடி பெத்தாம்பட்டி ஏரி, பசுவநத்தம்பட்டி ஏரி, வாணியம்பாடி ஏரி, செவந்தாம்பட்டி சின்னேரிஉள்பட, 10 ஏரிகளில் நிரம்பி, இறுதியில் திருமணிமுத்தாறில் கலக்கும்.

இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, பல ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். துணை ஏரிகளில், உபரி தண்ணீரை நிரப்பினால், பனமரத்துப்பட்டி, மல்லூர் பேரூராட்சி மற்றும், 10 கிராம ஊராட்சிகளில் நிலத்தடிநீரில் உள்ள புளோரைடு பாதிப்பு நீங்கி, நல்ல தண்ணீர் கிடைக்கும். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் பனமரத்துப்பட்டி ஏரிக்கு நீர்வரத்து இன்றி கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன.

அத்துடன் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஏரிக்கு தண்ணீர் வரத்துக்கு வழியில்லாமல் ஆனது. பனமரத்துப்பட்டி ஏரியில் அடர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி ஏரியையும் நீர்வரத்து பகுதிகளையும் மறு சீரமைக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கையாக உள்ளது.

இவ்வாறு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply