இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றுவோம்: நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

தேவேந்திரர்களின் உரிமைகளுக்காகவும், தீண்டாமையை எதிர்த்தும் வாழ்நாள் முழுவதும் போராடிய போராளி இமானுவேல் சேகரனாரின் 65-ஆவது ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவரது தியாகத்தையும், போர்க்குணத்தையும் போற்றுவோம்.

இம்மானுவேல் சேகரன் மீது எனக்கு மிகுந்த பற்று உண்டு. அதனால் தான் ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அந்த தியாகியின் நினைவிடம் சீரழிந்து கிடந்ததை சகித்துக் கொள்ள முடியாமல் பல லட்ச ரூபாய் எனது சொந்த செலவில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை 30 ஆண்டுகளுக்கு முன் சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது இந்த இராமதாசு தான். அதன்பிறகு தான் அங்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் செல்லத் தொடங்கினார்கள். அந்த பெருமிதம் எனக்கு எப்போதும் உண்டு!

தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். வரும் அக்டோபர் 9-ஆம் தேதி அவரது 98-ஆவது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு ஆணையிட வேண்டும்!

இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்குகிறது. அன்று முதல் ஓராண்டுக்கு அதைக் கொண்டாடவும், அவரது வரலாறு, தியாகம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply