தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தின் (என்ஐஐஎப்) 5-ஆவது நிர்வாகக்குழு கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (17.11.2022) மாலை புதுதில்லியில் நடைபெற்றது.
சர்வதேச அளவில் நம்பகமான மற்றும் வர்த்தக ரீதியான தளமாக என்ஐஐஎப் மேம்படுத்தப்பட்டுள்ளது என நிர்வாகக்குழு தெரிவித்தது. மதிப்புமிக்க உலக மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களின் ஆதரவோடு மத்திய அரசும் இந்த நிதியத்தில் முதலீடு செய்கிறது.
இந்த நிதியத்தின் பணிகளை விரைவுப்படுத்தி முதலீடுகளை ஈர்க்குமாறு என்ஐஐஎப் குழுவினரை நிதியமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வரும் என்ஐஐஎப் குழுவினருக்கு திருமதி நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் திரு.அஜய் சேத், நிதிச்சேவைகள் துறை செயலாளர் திரு.விவேக் ஜோஷி, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் திரு.தினேஷ் காரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்.பிரபாகரன்