தமிழக அரசு, இந்த ஆட்சி முடியும் வரையிலாவது மின் கட்டண உயர்வு குறித்த பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழக அரசு, மின் கட்டணத்தை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம் என்பது தான் தமிழக மக்களின் கோரிக்கையாகும். தி.மு.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

குறிப்பாக மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த செப்டம்பரில் மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது.நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஜூலை 1 முதல் 4.70 சதவீதம் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், தொடர்ந்து பல ஆண்டுகளாக முழு அளவிலான மின் கட்டண திருத்தத்தை காண உள்ளதும் ஏற்புடையதல்ல.

அதாவது கட்டண உத்தரவில், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு (2023-24 முதல் 2026- 27 வரை) ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் தேதி, CPI – consumer price index அடிப்படையில் உண்மையான கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் (Tangedco) முன்மொழிவுக்கு TNERC ஒப்புதல் அளித்துள்ளது.

கட்டணம் 4.7% உயர்த்தப்பட்டால், பல்வேறு அடுக்குகளில் உள்ள உள்நாட்டு நுகர்வோருக்கான கட்டணம் யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 21 பைசா முதல் 51 பைசா வரை உயரும்.அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொதுவான சேவை இணைப்பு, எரிசக்தி கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8ல் இருந்து ரூ.8.37 ஆகவும், நிலையான கட்டணங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு கிலோவாட்டுக்கு ரூ.200 லிருந்து ரூ.209 ஆகவும் உயரும்.

மேலும் நுகர்வோரின் கருத்துகள் கேட்கப்படுமா என்பது குறித்து, கடந்த ஆண்டு பல ஆண்டு கட்டண உத்தரவை ஆணையம் அங்கீகரித்ததால், அது தேவையில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. “அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு (2026-27 வரை) இதே முறை பின்பற்றப்படும்” என்றும் தெரிகிறது.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் சிரமத்தில் இருக்கும் பொதுமக்களுக்கு மின் கட்டணம் உயர்ந்தால் பெரும் சுமையாக இருக்கும். மின் கட்டண உயர்வு சிறு தொழில் நிறுவனங்கள் MSME உள்ளிட்ட அனைத்தையும் நேரடியாக பாதிக்கும். தொழிலதிபர்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரத் தொடங்குவார்கள்.

அரசுக்கும் மக்களின் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து வரும் வேளையில் மின் கட்டண உயர்வு நியாயமில்லை.எனவே தமிழக அரசு, இந்த ஆட்சி முடியும் வரையிலாவது மின் கட்டண உயர்வு குறித்த பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலையில் செயல்பட வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply