மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமரின் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமரின் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். ‘ஆச்சார்யா சாணக்யா திறன் மேம்பாடு’ திட்டம் மற்றும் ‘புண்யாஷ்லோக் அஹில்யாதேவி ஹோல்கர் பெண்கள் புத்தொழில் திட்டம்’ ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களை வெளியிட்ட பிரதமர், பிரதமரின் விஸ்வகர்மாவின் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரையையும் வெளியிட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காவிற்கு திரு மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்.

திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட விஸ்வகர்மா பூஜை கொண்டாட்டங்களை நினைவு கூர்ந்தார். இன்று பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்து வரும் திருவிழா வார்தாவில் நடைபெறுகிறது என்றார். மகாத்மா காந்தி 1932 ஆம் ஆண்டு இதே நாளில் தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியதால், இன்று சிறப்பு வாய்ந்தது என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இன்று ஓராண்டு நிறைவடைந்துள்ள பிரதமரின் விஸ்வகர்மா கொண்டாட்டம், வார்தா மண்ணில் கொண்டாடப்படுவது, ஸ்ரீ வினோபா பாவேயின் சாதனை மற்றும் மகாத்மா காந்தியின் கர்ம பூமி ஆகியவை வளர்ச்சியடைந்த பாரதம் உறுதிப்பாட்டிற்கு புதிய சக்தியைக் கொண்டுவரும் சாதனை மற்றும் உத்வேகத்தின் சங்கமமாக இந்த நிகழ்வை ஆக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் விஸ்வகர்மா திட்டம் மூலம், திறன் மேம்பாடு மற்றும் ‘ஷ்ரம் டு சம்ரிதி’ (செழிப்புக்கு கடின உழைப்பு) மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அரசு தீர்மானித்துள்ளது என்றும், மகாத்மா காந்தியின் கொள்கைகள் அதை நனவாக்குவதற்கான ஒரு ஊடகமாக மாறும் என்றும் அவர் கூறினார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டினார்.

பிரதமரின் மித்ரா பூங்காவுக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டதை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். இன்றைய இந்தியா தனது ஜவுளித் துறையை உலகச் சந்தைகளின் உச்சத்திற்கு கொண்டு செல்ல பணியாற்றி வருவதை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் ஜவுளித் தொழிலுக்கு பல நூற்றாண்டுகள் பழமையான புகழையும், அங்கீகாரத்தையும் மீண்டும் நிலைநாட்டுவதே இந்தியாவின் இலக்கு என்று அவர் மேலும் கூறினார். அமராவதியில் பிரதமர் மித்ரா பூங்கா அமைக்கப்பட்டது இந்த திசையில் மற்றொரு பெரிய நடவடிக்கை என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்தச் சாதனைக்காக அமராவதி மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் முதலாம் ஆண்டு விழாவிற்கு மகாராஷ்டிராவில் உள்ள வார்தா தேர்வு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், இது அரசின் மற்றொரு திட்டம் மட்டுமல்லாமல், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான ஒரு செயல் திட்டமாக பழமையான பாரம்பரிய திறன்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு திட்டமாகும் என்றார். நமது பழமையான பாரம்பரிய திறன்கள்தான் இந்தியாவின் வளத்தின் பல புகழ்பெற்ற அத்தியாயங்களுக்கு அடிப்படையாக இருந்தன என்று குறிப்பிட்ட அவர், நமது கலை, பொறியியல், அறிவியல் மற்றும் உலோகவியல் ஆகியவை ஒட்டுமொத்த உலகிலும் ஈடு இணையற்றவை என்றார். “நாம் உலகின் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தியாளராக இருந்தோம்” என்று திரு மோடி எடுத்துரைத்தார். “மண்பாண்டங்களுக்கும், அக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களுக்கும் ஈடு இணை இல்லை” என்று பிரதமர் மேலும் கூறினார். தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, காலணி தைப்பவர், தச்சர்-கொத்தனார் மற்றும் இதுபோன்ற பல தொழில் வல்லுநர்கள் இந்தியாவின் வளத்திற்கு அடித்தளமாக இருந்து, இந்த அறிவையும் அறிவியலையும் ஒவ்வொரு வீட்டிற்கும் பரப்பினர் என்று திரு மோடி கூறினார்.

இந்த உள்நாட்டுத் திறன்களை அழிக்க ஆங்கிலேயர்கள் பல சதித்திட்டங்களை வகுத்தனர் என்று குறிப்பிட்ட திரு மோடி, வார்தா மண்ணில் இருந்தபடியே காந்திஜி கிராமப்புறத் தொழில்களை ஊக்குவித்தார் என்றார். சுதந்திரத்திற்குப் பிறகு அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்தத் திறமைக்கு உரிய மரியாதையை வழங்காதது நாட்டின் துரதிர்ஷ்டம்  என அவர் அதிருப்தி தெரிவித்தார். முந்தைய அரசுகள் கைவினை மற்றும் திறன்களை மதிக்க மறந்து விஸ்வகர்மா சமூகத்தை தொடர்ந்து புறக்கணித்தன என்று குறிப்பிட்ட அவர், இதன் விளைவாக முன்னேற்றம் மற்றும் நவீனத்தின் ஓட்டத்தில் இந்தியா பின்தங்கத் தொடங்கியது என்று சுட்டிக்காட்டினார்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய திறன்களில் புதிய சக்தியைக் கொண்டுவர தற்போதைய அரசு தீர்மானித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், “சம்மான், சமர்த்யா, சம்ரிதி” (மரியாதை, திறன் மற்றும் வளம்) ஆகியவை பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் உணர்வை உருவாக்குகின்றன என்று குறிப்பிட்டார். பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கு மரியாதை அளித்தல், கைவினைஞர்களுக்கு அதிகாரமளித்தல், விஸ்வகர்மாக்களின் வளம் ஆகியவையே நமது நோக்கம் என்று பிரதமர் கூறினார்.

பிரதமரின் விஸ்வகர்மாவை வெற்றிகரமாக்க பல்வேறு துறைகளின் பெரிய அளவிலான மற்றும் முன்னோடியில்லாத ஒத்துழைப்பு குறித்து கவனத்தை ஈர்த்த பிரதமர், 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 5000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்தத் திட்டத்திற்கு உத்வேகம் அளித்து வருவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டில், 18 வெவ்வேறு பாரம்பரிய திறன்களைக் கொண்ட 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று திரு மோடி கூறினார். நவீன இயந்திரங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்ட விஸ்வகர்மாக்களுக்கு உற்பத்தித்திறன் மற்றும் விளைபொருட்களின் தரத்தை அதிகரிக்க உதவும் வகையில் நவீன உபகரணங்கள், ரூ .15,000 இ-வவுச்சர் மற்றும் ரூ .3 லட்சம் வரை உத்தரவாதம் இல்லாமல் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார். விஸ்வகர்மாக்களுக்கு ஓராண்டுக்குள் ரூ.1,400 கோடி கடன் வழங்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார்.

பாரம்பரிய திறன்களுக்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தினரின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய பிரதமர், முந்தைய ஆட்சிகளில் அவர்கள் எதிர்கொண்ட புறக்கணிப்பு குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், தற்போதைய அரசுதான் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்றார். முந்தைய ஆண்டின் புள்ளிவிவரங்களை சுட்டிக் காட்டிய அவர், விஸ்வகர்மா திட்டத்தின் அதிகபட்ச பலன்களை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெற்று வருவதாக தெரிவித்தார்.

விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வெறும் கைவினைஞர்களாக மட்டுமின்றி, தொழில்முனைவோர்களாகவும், வர்த்தக உரிமையாளர்களாகவும் மாற வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்திய பிரதமர், விஸ்வகர்மாக்கள் செய்யும் பணிகளுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அந்தஸ்து வழங்கப்படுவதையும் குறிப்பிட்டார். விஸ்வகர்மாவை பெரிய நிறுவனங்களின் விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாற்றுவதற்காக பாரம்பரியப் பொருட்களை சந்தைப்படுத்தும் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு மற்றும் ஒற்றுமை வணிக வளாகம் போன்ற முயற்சிகள் பற்றி அவர் பேசினார்.

கைவினைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்கள் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்துவதற்கான ஊடகமாக மாறியுள்ள ONDC மற்றும் GEM பற்றி பிரதமர் மோடி பேசினார். பொருளாதார முன்னேற்றத்தில் பின்தங்கிய சமூக வர்க்கம் இப்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். “திறன் இந்தியா இயக்கம் அதை மேலும் வலுப்படுத்துகிறது” என்று அவர் கூறினார். திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி பெற்றுள்ளதாக திரு மோடி தெரிவித்தார். திறன் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் இந்தியாவின் திறன்கள் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரான்சில் ஏற்பாடு செய்யப்பட்ட உலகத் திறன்கள் குறித்த மிகப்பெரிய நிகழ்ச்சியில் இந்தியா பல விருதுகளை வென்றது குறித்து பெருமிதத்துடன் தெரிவித்தார்.

“மகாராஷ்டிராவில் ஜவுளித் தொழில் அபரிமிதமான தொழில்துறை வாய்ப்புகளைக் கொண்டுள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார். விதர்பா பகுதி உயர்தர பருத்தி உற்பத்திக்கான ஒரு பெரிய மையமாக இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார், இருப்பினும் அடுத்தடுத்து வந்த அரசு அற்ப அரசியல் மற்றும் விவசாயிகளின் பெயரில் ஊழல் காரணமாக பருத்தி விவசாயிகளை துன்பத்தில் தள்ளின . 2014-ல் தேவேந்திர பட்னாவிஸ் அரசு அமைந்தபோது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பணிகள் வேகமாக முன்னேறியதை திரு மோடி எடுத்துரைத்தார். அமராவதியின் நந்த்கான் கண்டேஷ்வரில் ஒரு ஜவுளி பூங்கா கட்டப்பட்டது, அங்கு எந்தத் தொழிற்சாலையும் முதலீடு செய்ய தயாராக இல்லை, ஆனால் இன்று அது வெற்றிகரமாக வளர்ந்து மகாராஷ்டிராவின் பெரிய தொழில்துறை மையமாக மாறி வருகிறது என்று அவர் கூறினார்.

பிரதமரின் மித்ரா பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் வேகத்தை எடுத்துரைத்த திரு மோடி, இரட்டை என்ஜின் அரசின் மன உறுதி வெளிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். “இந்தியா முழுவதும் 7 பிரதமரின் மித்ரா பூங்காக்கள் அமைக்கப்படும்” என்று திரு மோடி அறிவித்தார். பண்ணையிலிருந்து இழை வரை, இழையிலிருந்து துணி வரை, துணியிலிருந்து வடிவமைப்பு வரை, வடிவமைப்பிலிருந்து வெளிநாடுகள் வரை முழுமையான சுழற்சியை இந்த பார்வை உள்ளடக்கியது என்று அவர் கூறினார், அதாவது விதர்பாவின் பருத்தியிலிருந்து உயர்தர துணி தயாரிக்கப்படும், வடிவமைப்புக்கு  ஏற்ப துணியால் தயாரிக்கப்படும் ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் நின்று பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். பிரதமர் மித்ரா பூங்கா மூலம் மட்டும் ரூ.8 முதல் 10 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, விதர்பா மற்றும் மகாராஷ்டிராவில் இளைஞர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இது உதவும் என்றும், மற்ற தொழில்களுக்கும் ஊக்கமளிக்கும் என்றும் கூறினார்.

புதிய விநியோகச் சங்கிலிகள் உருவாக்கப்படும், இது நாட்டின் ஏற்றுமதிக்கு உதவும், இது வருமானத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் கூறினார். இந்தத் தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான நவீன உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புக்கு மகாராஷ்டிரா தயாராக உள்ளது என்றும் திரு மோடி வலியுறுத்தினார். இதில் புதிய நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், சம்ருதி மகாமார்க் மற்றும் நீர் மற்றும் விமான இணைப்பு விரிவாக்கம் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார். “மகாராஷ்டிரா ஒரு புதிய தொழில் புரட்சிக்கு தயாராக உள்ளது” என்று திரு மோடி கூறினார்.

மாநிலத்தின் பன்முக வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் மகாராஷ்டிராவின் விவசாயிகளின் பங்கை ஒப்புக் கொண்ட அவர், நாட்டின் செழிப்பு விவசாயிகளின் மகிழ்ச்சியுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார். விவசாயிகளின் வளத்தை மேம்படுத்த இணைந்து பணியாற்ற இரட்டை என்ஜின் அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார். பிரதமர் உழவர் நல நிதி திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை திரு மோடி எடுத்துரைத்தார். இதில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ .6,000 வழங்குகிறது, மகாராஷ்டிரா அரசு அதே தொகையைச் சேர்த்து விவசாயிகளின் வருமானத்தை ஆண்டுக்கு ரூ .12,000-ஆக அதிகரிக்கிறது. வெறும் ரூ.1-க்கு பயிர் காப்பீடு வழங்குவது, விவசாயிகளுக்கான மின் கட்டணத்தை தள்ளுபடி செய்வது குறித்தும் பிரதமர் பேசினார். பிராந்தியத்தின் நீர்ப்பாசன சவால்கள் குறித்து கவனம் செலுத்திய பிரதமர் மோடி, மாநிலத்தில் தற்போதைய அரசின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகள் பின்வரும் நிர்வாகத்தால் தாமதப்படுத்தப்பட்டன என்று சுட்டிக்காட்டினார். இன்று, தற்போதைய மாநில அரசு இந்தத் திட்டங்களுக்கு புத்துயிர் அளித்து விரைவுபடுத்தியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நாக்பூர், வார்தா, அமராவதி, யவத்மால், அகோலா மற்றும் புல்தானா மாவட்டங்களில் உள்ள 10 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ரூ .85,000 கோடி மதிப்புள்ள வான்-கங்கா மற்றும் நல்-கங்கா நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

“மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது” என்று குறிப்பிட்ட பிரதமர், பிராந்தியத்தில் உள்ள வெங்காய விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40%-லிருந்து 20%-மாக குறைக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் தாக்கத்திலிருந்து உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் திரு மோடி விவாதித்தார், “நாங்கள் சமையல் எண்ணெய்களின் இறக்குமதிக்கு 20% வரி விதித்துள்ளோம், மேலும் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் மீதான சுங்க வரியை 12.5% – லிருந்து 32.5% – ஆக உயர்த்தியுள்ளோம்” என்று கூறினார். இந்த முயற்சிகள் விரைவில் வேளாண் துறைக்கு சாதகமான முடிவுகளை அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பொய்யான வாக்குறுதிகளில் விழ வேண்டாம் என்று எச்சரித்த பிரதமர் மோடி, இன்றும் கடன் தள்ளுபடிக்காக போராடும் தெலுங்கானா விவசாயிகளையும் குறிப்பிட்டார். மகாராஷ்டிராவின் விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஏமாற்றும் வாக்குறுதிகளால் தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சமூகத்தில் பிளவை உருவாக்க விரும்பும் சக்திகள் மற்றும் வெளிநாட்டு நிலங்களில் இந்திய மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை அவமதிக்கும் சக்திகளுக்கு எதிராகவும் பிரதமர் மோடி எச்சரித்தார். லோகமான்ய திலகரின் தலைமையின் கீழ் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி ஒற்றுமைக்கான திருவிழாவாக மாறியதை அவர் நினைவு கூர்ந்தார். குடிமக்கள் பாரம்பரியம், முன்னேற்றம், மரியாதை மற்றும் வளர்ச்சிக்கான செயல்திட்டத்துடன் நிற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “நாம் ஒன்றிணைந்து மகாராஷ்டிராவின் அடையாளத்தைப் பாதுகாப்போம், அதன் பெருமையை அதிகரிப்போம். மகாராஷ்டிராவின் கனவுகளை நிறைவேற்றுவோம்” என்று திரு மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, மத்திய நடுத்தர, சிறு மற்றும் குறு தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி, துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் திரு அஜித் பவார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

நிகழ்ச்சியின் போது, பிரதமரின் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களை பிரதமர் வழங்கினார். இந்தத் திட்டத்தின் கீழ் கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்ட உறுதியான ஆதரவை அடையாளப்படுத்தும் வகையில், 18 தொழில்களின் கீழ் 18 பயனாளிகளுக்கு பிரதமர் விஸ்வகர்மாவின் கீழ் கடன் வழங்கினார். அவர்களின் மரபு மற்றும் சமூகத்திற்கு நீடித்த பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரதமர் விஸ்வகர்மாவின் கீழ் ஓராண்டு வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் அர்ப்பணிக்கப்பட்ட நினைவு முத்திரையை அவர் வெளியிட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆயத்த ஆடை பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 1000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்காவை மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்ஐடிசி) மாநில அமலாக்க நிறுவனமாக உருவாக்கி வருகிறது. ஜவுளித் தொழிலுக்காக 7 பிரதமரின் மித்ரா பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் பிரதமரின் மித்ரா பூங்காக்கள் ஒரு முக்கிய படியாகும். இது உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை உள்கட்டமைப்பை உருவாக்க உதவும், இது அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) உட்பட பெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்கும். மேலும் இத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும்.

மகாராஷ்டிரா அரசின் ‘ஆச்சார்யா சாணக்யா திறன் மேம்பாடு’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். 15 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்கள் தன்னம்பிக்கை பெறவும், பல்வேறு வேலை வாய்ப்புகளை அணுகவும் மாநிலம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் நிறுவப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் சுமார் 1,50,000 இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

‘புன்யஷ்லோக் அஹில்யாதேவி ஹோல்கர் மகளிர் புத்தொழில் திட்டத்தை’ பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவில் பெண்கள் தலைமையிலான புத்தொழில்களுக்கு ஆரம்ப கட்ட ஆதரவு வழங்கப்படும். ரூ.25 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மொத்த ஒதுக்கீட்டில் 25% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரைச் சேர்ந்த பெண்களுக்கு அரசு நிர்ணயித்தபடி ஒதுக்கப்படும். பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக மாற இது உதவும்.

Leave a Reply