புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் 10-வது ஆண்டில் பெருமையுடன் அடியெடுத்து வைக்கும் என்எல்சி இந்தியா நிறுவனம்.

மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா லிமிடெட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் 10-வது ஆண்டில் இன்று பெருமையுடன் அடியெடுத்து வைக்கிறது. 2015 செப்டம்பர் 28 அன்று, நிறுவனம் நெய்வேலியில் 10 மெகாவாட் சூரிய ஒளிமின்னழுத்த மின் நிலையத்தை இயக்குவதன் மூலம் தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்தைத் தொடங்கியது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், என்எல்சி இந்தியா நிறுவனம்  (என்.எல்.சி.ஐ.எல்) இந்தியாவின் எரிசக்தி நிலப்பரப்பை சீராக மாற்றி வருகிறது. இந்தியா “மெகாவாட்டிலிருந்து” ஜிகாவாட்டுக்கு மாறியதால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி வலுவான மாற்றம் தேவை என்று 2015 ஆம் ஆண்டில் பிரதமர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, என்.எல்.சி இந்தியா நிறுவனம் 1 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்த நாட்டின் முதல் பொதுத்துறை நிறுவனம் ஆனது, இது நிலையான மின் உற்பத்தியில் அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.

பழுப்பு நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், 1380 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 51 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இறங்கியுள்ளது. என்.எல்.சி.ஐ.எல் நிறுவனம் 1234 கோடி யூனிட் பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம் 1 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விலை குறைந்த மற்றும் நீடித்த மின்சாரத்தை வழங்கி லட்சக்கணக்கானோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.

2030-ம் ஆண்டுக்குள், 10,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறனை எட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக என்எல்சி இந்தியா நிறுவனம் புதிய துணை நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. என்.எல்.சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் (என்.ஐ.ஆர்.எல்) சொத்துக்களை பணமாக்குவதில் கவனம் செலுத்தும், என்.எல்.சி இந்தியா கிரீன் எனர்ஜி லிமிடெட் (என்.ஐ.ஜி.இ.எல்) தூய்மையான எரிசக்தி முயற்சிகளை முன்னெடுக்கும். மேலும், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில்  என்.எல்.சி.ஐ.எல் நிறுவனம் உறுப்பினராக இருப்பது நிலக்கரித் துறையில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டியின் வழிகாட்டுதலின் கீழ், என்.எல்.சி.ஐ.எல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம், எரிசக்தி சேமிப்பு அமைப்புகள் , பசுமை ஹைட்ரஜன், நீரேற்று சேமிப்பு நீர்மின் திட்டங்கள், பழுப்பு நிலக்கரியிலிருந்து மெத்தனால் மாற்றம், சுரங்கத்திலிருந்து மணல் முன்முயற்சிகள் மற்றும் முக்கியமான கனிம ஆய்வு ஆகிய திட்டங்களை இது தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

தற்போது 1.4 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனுடன், என்.எல்.சி.ஐ.எல் இந்த எண்ணிக்கையை நான்கு மடங்காக அதிகரிக்க உள்ளது. 2030-க்குள் 10 ஜிகாவாட் லட்சியத்தை அது இலக்காகக் கொண்டுள்ளது.ராஜஸ்தான், குஜராத், அசாம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், ஆகஸ்ட் 28 அன்று, என்.எல்.சி.ஐ.எல் தெலுங்கானா மாநில டிஸ்காம்களுடன் மத்திய பொதுத்துறை நிறுவன (சி.பி.எஸ்.யு) திட்டத்தின் கீழ் போட்டி விலையில் 200 மெகாவாட் சூரிய மின்சக்திக்கான 25 ஆண்டு மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

என்.எல்.சி இந்தியா நிறுவனம் இந்தப் பயணத்தைத் தொடரவும், 2070 -ம் ஆண்டுவாக்கில் நிகர பூஜ்ஜியம் என்ற பிரதமரின் இலக்கை அடைவதில் அதன் முக்கிய பங்கை வகிக்க உறுதிபூண்டுள்ளது..

Leave a Reply