தமிழக அரசு, விவசாயிகளுக்கு விவசாயக் கடனை முறையாக காலத்தே வழங்கி விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் துணை நிற்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு மாநிலம் முழுவதும் விவசாயத்தொழிலை மேம்படுத்த விவசாயிகளுக்கு விவசாயக் கடனை வழங்க தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதாக விவசாயிகள் குறை கூறுகின்றனர்.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், ஆடு மாடு வாங்குவதற்கான கடன் வழங்கப்படும்.

தள்ளுபடி செய்யப்படும் கடன்களுக்கு அரசு நிதிஉதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படுகிறது.

கூட்டுறவு சங்கங்கள் கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கும், புதிதாக கடன் பெற வருபவர்களுக்கும் நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி கடன் கொடுக்க தவறுகிறது.

குறிப்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகள் கடன் கேட்டால் 2, 3 ஏக்கர் வைத்திருந்தால் கடன் கொடுப்பதாகவும், 5 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு 2, 3 ஏக்கர் வரை கடன் கொடுக்கலாம் என்று கூட்டுறவு கடன் சங்கங்கள் தெரிவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதாவது விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் கேட்டால் 5 ஏக்கர் வைத்திருந்தால் ஒரு சில ஏக்கருக்கு மட்டுமே கடன் வழங்கி, மீதமுள்ள ஏக்கருக்கு கடன் வழங்கவில்லை.

இதனால் விவசாயிகள் தங்களின் விவசாய நிலத்திற்கு கடன் பெற தனியார் வங்கியில் கடன் பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு, அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிதிப்பற்றாக்குறை இருக்குமேயானால் அதை சரி செய்ய வேண்டியது தமிழக அரசு.

இல்லையென்றால் பருவமழை தொடங்க இருக்கும் வேலையில் விவசாயிகள், விவசாயம் செய்ய போதுமான பொருளாதாரம் இல்லாமல், கடனும் கிடைக்காத பட்சத்தில் மிகுந்த சிரமப்படுவார்கள்.

விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் எவ்வித சமரசமும், காரணமும் இருக்கக்கூடாது. விவசாயத்திற்கு தான் முதலில் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி விவசாயத் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.

எனவே தமிழக அரசு விவசாயக் கடனுக்காக காத்திருக்கும் விவசாயிகள் பயிர் செய்யும் பரப்பளவிற்கு தாமதமின்றி காலத்தே கடன் வழங்க உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ‌

Leave a Reply