சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் தலைமையிலான இந்தியக் குழுவினர் இங்கிலாந்து பயணம்.

சட்டம் மற்றும் நீதித் துறை  இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையிலான இந்திய தூதுக்குழு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2, 2024 வரை இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டது.  சட்ட விவகாரங்கள்  துறை செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி, சட்ட விவகாரங்கள் துறையின் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் திரு. துருவ குமார் சிங், இங்கிலாந்து பயணத்தின் போது அமைச்சருடன் சென்றனர். இங்கிலாந்துக்கான இந்திய தூதர் திரு விக்ரம் துரைசுவாமி மற்றும் ஆணையத்தின் பிற மூத்த அதிகாரிகளும் இந்த முக்கிய நிகழ்ச்சிகளின் போது பங்கேற்றனர். இந்திய தூதுக்குழுவினர், இங்கிலாந்தின்  நீதித்துறை செயலாளர்  ஷபானா மஹ்மூத் உடனான இருதரப்பு சந்திப்பில் பங்கேற்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமான மற்றும் நட்புரீதியான சூழ்நிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை , சட்டங்களை எளிமைப்படுத்துதல், சட்ட வரைவுகளில் எளிய மொழியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும், மத்தியஸ்தம் போன்றவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தகராறுகளுக்கு விரைவான தீர்வை எளிதாக்குவதற்கான சட்டங்கள் மற்றும் கொள்கைகளில் இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு சீர்திருத்தங்களின் தற்போதைய நிலை, பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அக்டோபர் 1  அன்று இரு நாடுகளின் அதிகாரிகள் முன்னிலையில் இந்திய பார் கவுன்சில் தலைவர் மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்ட சங்கத்தின் தலைவர் இடையே நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபடி, இங்கிலாந்தில் தகுதிவாய்ந்த சட்ட வல்லுநர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களை இந்தியாவில் செயல்பட எளிதாக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு நலன் சார்ந்த பிற விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.

 அக்டோபர் 2 , 2024 அன்று, லண்டனின் டாவிஸ்டாக் சதுக்கத்தில் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த காந்தி ஜெயந்தி விழாவில் அமைச்சர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.  நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸுக்குச் சென்ற அவர், பாபா சாஹேப் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினார். பாபா சாஹேப் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களுக்கும் அவர் லண்டனில் தங்கியிருந்தபோது    சென்றார்.

 அக்டோபர் 1 அன்று லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டனின் சட்ட ஆண்டு விழாவின் தொடக்க விழாவில்,  இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்து கொண்டார். பின்னர் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தார்.

Leave a Reply