பஞ்சாப் மாநிலத்தில் தடையற்ற முறையில் நெல், சிஎம்ஆர் அரிசி ஆகியவற்றின் கொள்முதலை மத்திய அரசு உறுதி செய்துள்ளது: மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி.

பஞ்சாப் மாநிலத்தில், தடையற்ற நெல், தனிப்பயன் அரைவை அரிசி (சிஎம்ஆர்) ஆகியவற்றின் கொள்முதலை உறுதி செய்ய மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி இன்று (27.10.2024) செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். 2024-25 கரீப் சந்தைப்படுத்தல் பருவத்தில் (கேஎம்எஸ்) நிர்ணயிக்கப்பட்ட 185 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு முழுமையாக கொள்முதல் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். அரிசி ஆலை உரிமையாளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்படும் என்றும் இதனால் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு சிரமத்தையும் உடனடியாக தீர்க்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

பஞ்சாபில், நெல் கொள்முதல் 2024 அக்டோபர் 1 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது என அவர் குறிப்பிட்டார். தற்காலிக தளங்கள் உட்பட 2700 மண்டிகளுடன், சீரான செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார். செப்டம்பரில் பெய்த கனமழையால் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், அறுவடையும் கொள்முதலும் சற்று தாமதமானது என அவர் தெரிவித்தார். கொள்முதல் தாமதமாகத் தொடங்கிய போதிலும், நவம்பருக்குள் 185 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யும் இலக்கு அடையப்படும் என அவர் உறுதியளித்தார்.  2024 அக்டோபர் 26 நிலவரப்படி, மண்டிகளுக்கு வந்த 54.5 லட்சம் மெட்ரிக் டன் நெல்லில், 50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

சிஎம்ஆர்- க்கு போதுமான சேமிப்பு ஏற்பாடுகள் இருப்பதை உறுதி செய்வதற்காக, பஞ்சாப் மாநில அரசுடன் பல உயர்மட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி குறிப்பிட்டார்.

Leave a Reply