பாம்பன் தெற்குவாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் டோனா பிரிட்டோ என்பவருக்குச் சொந்தமான ஐஎன்டி டிஎன் 10 எம்எம் 3030 என்ற விசைப்படகையும், அதிலிருந்த 14 மீனவர்களையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று உள்ளனர்.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி, இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து அவர்களுடைய 5 மீன் பிடி படகுகளையும் பறிமுதல் செய்தது. உடனடியாக இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி பதவி ஏற்ற 2014 ஆம் ஆண்டு முதல் 2024 வரை பத்து ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் எண்ணிக்கை 3,656 பேர்.
மொத்தம் 611 விசைப்படகுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு, நவம்பர் 22ஆம் தேதி வரை இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை 736 முறை தாக்கியிருப்பதாக, வெளியுறவுத்துறை இணை அமைச்சரே நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்.
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
ஆனால் ஒன்றிய அரசு தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குதல் நடத்துவதையும், கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பதையும் மீனவர்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பதையும் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா