மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு குறித்த மூன்றாவது சர்வதேசக் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இது உலக சுகாதார அமைப்பு (WHO), உலகளாவிய மேம்பாட்டு மையம் (CGD) ஆகியவற்றுடன் இணைந்து, சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையால் (DHR) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவத்சவா, சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பாஹல், மருந்துகள் துறை செயலாளர் திரு அமித் அகர்வால் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு, கருத்தரங்கின் கருப்பொருள் “கொள்கைக்கான ஆதாரத்தை இணைப்பது: குறைந்த செலவில் சுகாதார சேவைகளுக்குத் தொழில்நுட்ப மதிப்பீடு” என்பதாகும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. நட்டா, இந்தியாவின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதிலும், அனைவருக்கும் குறைந்த செலவில் சுகாதார சேவையை உறுதி செய்வதிலும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையை எடுத்துரைத்தார். உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (UHC) இலக்குகளுடன் இணைந்து, திறமையான, சமமான, உயர்தர சுகாதார அமைப்பை உருவாக்க ஆதாரம் சார்ந்த கொள்கை வகுப்பதை முன்னெடுப்பதில் சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டின் (HTA) முக்கிய பங்கை அவர் விளக்கினார்.
குணப்படுத்துதல், நோய்த்தடுப்பு, மறுவாழ்வு அளிக்கும் சுகாதார சேவை ஆகியவற்றை வழங்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது என்று திரு நட்டா எடுத்துரைத்தார். ஆரம்ப, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை சுகாதார பராமரிப்புக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் தெரிவித்தார். இதுவரை 22 அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், எம்பிபிஎஸ், எம்டி இடங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
திவாஹர்