குஜராத்தின் அகமதாபாதில் ரூ. 146 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து அவர் தனது உரையைத் தொடங்கினார். இந்த நிகழ்வில் நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கிவைக்கப்படுவதாகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுவதாகவும் அவர் கூறினார். அகமதாபாத்- வீரம்காம் ரயில்வே வழித்தடத்தில் சனந்த்-செக்லா-கடி சாலையில் ரூ.60 கோடி செலவில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்படுவது இந்தப் பணிகளில் முக்கியமான ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய நெடுஞ்சாலையில் நர்மதா கால்வாய் மீது ரூ.36.30 கோடி செலவில் 4 வழிச்சாலைக்கும், சரோடியில் ரூ.45 கோடி செலவில் சாலை மேம்பாலம் அமைக்கவும் திரு அமித் ஷா இன்று அடிக்கல் நாட்டினார். காந்தி நகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்தப் பணிகள் முக்கியமானவையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
உள்கட்டமைப்பை பொறுத்தவரை குஜராத் தற்போது நாட்டிலேயே முதலாவது இடத்தில் உள்ளது என்று திரு அமித் ஷா தமது உரையில் குறிப்பிட்டார். சனந்த் என்ற இடத்தில் 500 படுக்கை வசதிகள் கொண்ட நவீன மருத்துவமனையை மத்திய அரசு கட்டவிருப்பதாக கூறிய அவர், இந்த மருத்துவமனை சனந்த் மற்றும் பாவ்லா வட்டங்களில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 24 மணி நேரமும் சேவை செய்வதாக இருக்கும் என்றார்.
பிரதமர் திரு மோடி தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் வலைப்பின்னலை 60 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்