இந்தியாவும் நியூசிலாந்தும் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஜனநாயக மாண்புகள், வலுவான மக்களிடையேயான உறவுகள், பரஸ்பர பொருளாதார உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நீண்டகால ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் வர்த்தகத்தையும் முதலீட்டையும் உள்ளடக்கிய இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் நியூசிலாந்துப் பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்சனுக்கும் இடையேயான சந்திப்பின்போது, நமது பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இரு நாடுகளும் விரிவான, பரஸ்பர நன்மை பயக்கும் இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் (எஃப்டிஏ) பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதை அறிவித்துள்ளன. இந்த குறிப்பிடத்தக்க அறிவிப்பு இன்று (2025 மார்ச் 16) இந்தியாவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலுக்கும் நியூசிலாந்தின் வர்த்தக, முதலீட்டு அமைச்சர் திரு டோட் மெக்லே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது வெளியிடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான ஒத்துழைப்புக்கு இது அடித்தளம் அமைத்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதுடன் சந்தை அணுகலை மேம்படுத்தக் கூடிய சமநிலையான விளைவுகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த மைல்கல் நடவடிக்கை, வலுவான பொருளாதார ஒத்துழைப்பையும், செழிப்பை வளர்ப்பதற்கான பகிரப்பட்ட பார்வையையும் பிரதிபலிக்கிறது.
திவாஹர்