தூய்மையான காற்று தினம்: தூய்மையான காற்றுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.

நீலவானத்திற்கான சர்வதேச தூயக் காற்று தினம் செப்டம்பர் 7 அன்று கொண்டாடப்பட்டது. தூயக் காற்றுக்கு உலகளாவிய அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டும் வகையில்,  2019-ம் ஆண்டு ஐநா பொதுச்சபை இந்த தினத்தை அறிவித்தது. காற்றின் தரத்தை மேம்படுத்தி மனிதகுல சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக  இந்த முன்முயற்சி அமைந்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் 7 அன்று ஜெய்பூரில் நீலவானத்திற்கான சர்வதேச தூயக் காற்று தினம் “#தூயக்காற்றில் இப்போது முதலீடு செய்யுங்கள்” (“Invest in #CleanAirNow.”) என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்,  ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசிய தூயக் காற்று திட்டத்தின் கீழ், கவனம் குவித்த செயல்பாடுகள் காரணமாக 95 நகரங்களில் காற்று மாசு அளவு குறைந்திருப்பதாக இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது. இவற்றில் 51 நகரங்களில்  அடிப்படை ஆண்டான 2017-18 உடன்  ஒப்பிடுகையில், 20 சதவீதத்திற்கும் அதிகமாக  பிஎம்10 அளவு  குறைந்திருந்ததாகவும், 21 நகரங்களில் இது 40 சதவீதத்தை தாண்டி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. சிறந்த செயல்பாட்டுடன் வெற்றிபெற்ற நகரங்களுக்கு ரொக்கப்பரிசு, கேடயங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை கொண்ட தூய்மைக் காற்று ஆய்வு விருதுகள் வழங்கப்பட்டன.

24 மாநிலங்களைச் சேர்ந்த 131 நகரங்களில் காற்று மாசினை கட்டுப்படுத்த நிதியாண்டு 2019-20 முதல் நிதியாண்டு 2025-26 வரையிலான காலத்திற்கு ரூ. 19, 614. 44 கோடி தேசிய தூயக்காற்று திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. இதுவரை  ரூ.11,211.13 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தூயக் காற்று திட்டத்தின் அமலாக்கத்தை கண்காணிப்பதற்காக ப்ராணா போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் இந்த போர்ட்டலில் கிடைக்கும். இது எதிர்கால கொள்கை முடிவுகளுக்கு உதவியாக இருக்கும்.

தூயக்காற்று திட்டத்தை செயல்படுத்த நகர்ப்புறங்களில் மரக்கன்றுகள் நடுதலை ஊக்குவிக்கும் பல்வேறு முன்முயற்சிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியான நகர வனத்திட்டம், 2020-ல் தொடங்கப்பட்டது. உள்ளூர் சமூகங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் ஈடுபாட்டுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை நாட்டில் 385 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய தூயக் காற்று இயக்கத்திற்கு ஆதரவாக “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” என்ற அரசின் முன்முயற்சி அமைந்துள்ளது. இது மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் என்ற கலாச்சாரத்தை வளர்ப்பதாகும்.  குடிமக்களிடையே மரக்கன்றுகள் நடுதலை இந்த இயக்கம் வலுப்படுத்துவதுடன், சமூக பந்தங்களை ஏற்படுத்தி பசுமைப் பரப்பை விரிவுபடுத்துவதாகும். மேலும் காற்று மாசினை  தடுப்பதற்கு மரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

Leave a Reply