மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இரண்டு நாட்களுக்கு முன்பு மோசமான வானிலை காரணமாக புனேவில் தமது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் இன்றைய மெய்நிகர் நிகழ்வுக்கு வழவகுத்த தொழில்நுட்பத்தை அவர் பாராட்டினார். சிறந்த ஆளுமைகளுக்கு உத்வேகம் அளிக்கும் இந்த நிலம் மகாராஷ்டிரா வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தைக் காண்கிறது என்று அவர் கூறினார். ஸ்வர்கேட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் புனே மெட்ரோ பிரிவு தொடங்கப்பட்டதையும், புனே மெட்ரோ முதல் கட்டத்தின் ஸ்வர்கேட் – கத்ராஜ் விரிவாக்கப் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதையும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பிதேவாடாவில் கிராந்திஜோதி சாவித்ரிபாய் புலே முதல் பெண்கள் பள்ளியில் நினைவு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டியது குறித்தும் அவர் பேசினார். புனேயில் வாழ்க்கையை எளிதாக்கும் நடைமுறைகளை அதிகரிப்பதில் ஏற்பட்டுள்ள வேகமான முன்னேற்றம் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.

பகவான் விட்டலின் பக்தர்களுக்கு இன்று ஒரு சிறப்பு பரிசும் கிடைத்துள்ளது என்று கூறிய பிரதமர், சோலாப்பூர் நகருடன் நேரடி விமான இணைப்பை ஏற்படுத்துவதற்காக விமான நிலையம் திறக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். தற்போதுள்ள விமான நிலையத்தின் மேம்படுத்தல் பணிகள் நிறைவடைந்த பின்னர் முனையத்தின் திறன் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். பயணிகளுக்காக புதிய சேவைகள், வசதிகள் உருவாக்கப்பட்டு, பகவான் விட்டலின் பக்தர்களுக்கு வசதி அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த விமான நிலையம் வணிகங்கள், தொழில்கள், சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறிய அவர், இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக மகாராஷ்டிரா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இன்று, மகாராஷ்டிராவுக்கு புதிய தீர்மானங்களுடன் பெரிய இலக்குகள் தேவைப்படுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர், புனே போன்ற நகரங்களை முன்னேற்றம், நகர்ப்புற வளர்ச்சியின் மையமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். புனேயின் முன்னேற்றம் மற்றும் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் அழுத்தம் குறித்து பேசிய பிரதமர், வளர்ச்சி, திறனை அதிகரிக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். இந்த இலக்கை அடைய, தற்போதைய மாநில அரசு புனேவின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் அணுகுமுறையுடன் செயல்பட்டு வருவதாகவும், நகரம் விரிவடைவதால் இணைப்புக்கு ஊக்கம் அளிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

புனே மெட்ரோ குறித்த விவாதங்கள் 2008-ம் ஆண்டு தொடங்கியதையும், 2016-ம் ஆண்டு தமது அரசு எடுத்த விரைவான முடிவுகளால் அடிக்கல் நாட்டப்பட்டதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். இதன் விளைவாக, இன்று புனே மெட்ரோ வேகம் பெற்று விரிவடைந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். இன்றைய திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, ஒருபுறம் ஸ்வர்கேட் வரையிலான மாவட்ட நீதிமன்றத்தின் புனே மெட்ரோ பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், மறுபுறம் ஸ்வர்கேட் முதல் கத்ரஜ் வரையிலான வழித்தடத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூபி ஹால் கிளினிக்கிலிருந்து ராம்வாடிக்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்ததை அவர் நினைவு கூர்ந்தார். 2016 ம் ஆண்டு முதல் தற்போது வரை புனே மெட்ரோ விரிவாக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளைப் பிரதமர் பாராட்டினார். ஏனெனில் விரைவான முடிவுகள் எடுக்கப்பட்டு தடைகள் நீக்கப்பட்டது என அவர் தெரிவித்தார். தற்போதைய அரசு புனேயில் நவீன மெட்ரோ கட்டமைப்பை உருவாக்கியதைச் சுட்டிக்காட்டிய அவர், முந்தைய அரசு 8 ஆண்டுகளில் ஒரு மெட்ரோ தூணை கூட கட்டவில்லை என்றார்.

மகாராஷ்டிராவின் முன்னேற்றத்தை உறுதி செய்வதில் வளர்ச்சி சார்ந்த நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, இந்தத் தொடர்ச்சியில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றார். மெட்ரோ திட்டங்கள் முதல் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள் வரை முன்பு கிடப்பில் போடப்பட்டிருந்த பல்வேறு திட்டங்களை அவர் எடுத்துரைத்தார்.

அப்போதைய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆரிக் நகரத்தின் முக்கிய அங்கமான பிட்கின் தொழில்துறை பகுதி குறித்து பிரதமர் பேசினார். டெல்லி-மும்பை தொழில்துறை வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த திட்டம் தடைகளை எதிர்கொண்டது என்று அவர் கூறினார். ஆனால் முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசின் தலைமையில் புத்துயிர் பெற்றது என அவர் தெரிவித்தார். பிட்கின் தொழில்துறை முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக கூறிய திரு நரேந்திர மோடி, இந்தப் பிராந்தியத்திற்கு குறிப்பிடத்தக்க முதலீடுகள், வேலை வாய்ப்புகளை கொண்டு வருவதற்கான அதன் திறனை சுட்டிக்காட்டினார். 8,000 ஏக்கர் பரப்பளவில் பிட்கின் தொழில்துறை பகுதியை மேம்படுத்துவதன் மூலம், ஆயிரக்கணக்கான கோடி முதலீடு மகாராஷ்டிராவுக்கு வரும் எனவும் அது ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறினார். முதலீடு மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடைமுறை இன்று மகாராஷ்டிராவில் இளைஞர்களின் மிகப்பெரிய பலமாக மாறி வருகிறது என்று அவர் கூறினார். நவீனமயமாக்கல் நாட்டின் அடிப்படை மதிப்புகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, இந்தியா தனது வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்தில் நவீனமயமாக்கப்பட்டு வளர்ச்சியடையும் என்று கூறினார். எதிர்காலத்திற்கு உகந்த கட்டமைப்பு வசதியும் வளர்ச்சியின் பயன்களும் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடைவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய அவர், நாட்டின் வளர்ச்சியில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பங்கேற்கும் போது இது நனவாக மாறும் என்று சுட்டிக் காட்டினார்.

Leave a Reply