கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன

நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை நவீனமயமாக்குதல் ஆகியவற்றுடன் கிராமப்புற இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்த முன்முயற்சி நில நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் மேம்படுத்தி, லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. சிக்கலான ஆவணங்கள் மற்றும் உரிமைத் தகராறுகள் தொடர்பான நீண்டகால சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் சமீபத்தில் எடுத்துரைத்தார். 2016-க்குப் பின்  கிராமப்புற இந்தியாவில் சுமார் 95% நிலப் பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இது கிராமப்புறங்களில் பாதுகாப்பான, எளிதில் அணுகக்கூடிய நில உரிமையை உறுதி செய்வதற்கான முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்தியாவில் நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது தகராறுகள், மோசடி மற்றும் திறமையற்ற கையேடு செயல்முறைகள் போன்ற பாரம்பரிய சவால்களை எதிர்கொள்வதன் மூலம் நில நிர்வாகத்தை மாற்றியமைத்துள்ளது. இப்போது, உரிமையாளர்கள்  தகவல்களை ஆன்லைனில் எளிதாக அணுகலாம், இது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது; சட்டவிரோத ஆக்கிரமிப்புகளைக் குறைக்கிறது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவுகள் தகராறு தீர்வைஎளிதாக்குகின்றன.  நீதிமன்ற சுமைகளை குறைக்கின்றன.  நில உரிமைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன. புவிசார் வரைபடத்துடன்  ஒருங்கிணைப்பது நில நிர்வாகத்தை மேம்படுத்துகிறது, துல்லியமான ஆய்வுகள் மற்றும் திட்டமிடலை செயல்படுத்துகிறது. நிலம் கையகப்படுத்துதல் அல்லது பேரழிவுகளின் போது, டிஜிட்டல் பதிவுகள் நியாயமான மற்றும் சரியான நேரத்தில் இழப்பீட்டை உறுதி செய்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த மாற்றம் இந்தியாவில் மிகவும் வெளிப்படையான, எளிதில் அணுகக்கூடிய, திறமையான நில நிர்வாக முறைக்கு வழி வகுத்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா நில பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டம், முன்பு தேசிய நிலப் பதிவு நவீனமயமாக்கல் திட்டம் என்று அழைக்கப்பட்டது, ஏப்ரல் 2016-ல் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் மத்திய துறை திட்டமாக மறுசீரமைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த நில தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்குவதன் மூலம் நவீன மற்றும் வெளிப்படையான நில பதிவு மேலாண்மை அமைப்பை நிறுவுவதே இதன் முக்கிய குறிக்கோள். இந்த அமைப்பு நிகழ்நேர நிலத் தகவல்களை வழங்குதல், நிலப் பயன்பாட்டை மேம்படுத்துதல், நில உரிமையாளர்கள் மற்றும்  வாங்குபவர்களுக்கு பயனளித்தல், கொள்கை வகுப்பதை ஆதரித்தல், நில தகராறுகளைக் குறைத்தல், மோசடி பரிவர்த்தனைகளைத் தடுத்தல், அலுவலகங்களுக்கு நேரடி வருகைகளை அகற்றுதல் மற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் தரவு பகிர்வை  நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply