இந்திய நில துறைமுக ஆணையத்தால் ரூ. 487 கோடி செலவில் மேற்கு வங்கத்தின் பெட்ராபோலில் கட்டப்பட்ட பயணிகள் முனைய கட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.

இந்திய நில துறைமுக ஆணையத்தால் (LPAI-எல்பிஏஐ) ரூ. 487 கோடி செலவில் கட்டப்பட்ட மேற்கு வங்கத்தின் பெட்ராபோலில் புதிய பயணிகள் முனைய கட்டடம், மைத்ரி துவார் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (27.10.2024) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மை செயலாளர், எல்பிஏஐ தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா தமது உரையில், பெட்ராபோலில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி, பயணிகள் முனைய கட்டடங்கள், மைத்ரி துவார் ஆகியவற்றின் தொடக்கம் ஒவ்வொரு துறைக்கும் புத்துயிர் அளிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் பிரதிபலிப்பாகும் என்று கூறினார்.

இந்திய நில துறைமுக ஆணையம் (LPAI-எல்பிஏஐ) நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருவதுடன், அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதுடன், மொழி, கலாச்சாரம் இலக்கியத்தை பரிமாறிக் கொள்வதற்கும் வசதி செய்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வளம், அமைதி, ஒத்துழைப்பு, முன்னேற்றம் என்ற நான்கு தாரக மந்திரங்களின் அடிப்படையில் இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

இந்த புதிய முயற்சி ஒட்டுமொத்த பிராந்தியத்தின் வளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வரும் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.  மைத்ரி துவார் ரூ 6 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது என்றும் இது ஒரு நாளைக்கு 600 முதல் 700 க்கும் மேற்பட்ட லாரிகள் கையாளும் என்றும் கூறினார்.

2023-24 ஆம் ஆண்டில், இந்த அனைத்து நில துறைமுகங்கள் மூலமாகவும் ரூ.71,000 கோடி மதிப்புள்ள வர்த்தகம் நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மேலும் 23 நில துறைமுகங்கள் மேம்படுத்தப்படவுள்ளதாக திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

Leave a Reply