புதுதில்லியில் நடைபெற்ற இந்தியன் எக்ஸ்பிரஸின் அடுத்த தலைமுறையினருக்கான மாநாட்டில் சிறந்த ஆளுகைக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய ஆட்சிப் ப்பணி, இனி ஒரு மேம்பட்ட பிரிவினருக்கு மட்டும் உரியதல்ல என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்திய ஆட்சிப் பணி ஜனநாயகமயமாக்கப்பட்டுள்ளது குறித்து அவர் தமது உரையில் எடுத்துரைத்தார். இந்தியாவின் மாறுபட்ட கட்டமைப்பை இந்திய ஆட்சிப் பணி பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் பல்வேறு தரப்பு மக்களுக்கு விரிவான சேவைகளை இது வழங்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது மாவட்ட ஆட்சியர், மாவட்ட மேம்பாட்டு ஆணையராக பணியாற்றுவதாகவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் முக்கிய காரணமாக அவர் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதையும், அவர்களின் செயல்திறனையும் மேற்கோள் காட்டி, அமைச்சர் பாராட்டினார். இந்திய குடிமைப் பணிகளில் பெண்களின் வளர்ச்சி குறித்து பெருமிதம் தெரிவித்த அமைச்சர், பாலின சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் வெற்றியை இது பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.
திவாஹர்