மாவீரர் பணிமனை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் சார்பில் அதன் இணைப்பாளர் இ. பிரசாத் என்பவர் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்று 10.03. 2025 அன்று வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையில், ”உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே!
எமது விடுதனை இயக்கத்தின் தலைவரும் தமிழினத்தின் ஒப்பற்ற பெருந்தலைவருமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதி தளராது 36 ஆண்டுகளாக எதிரிப் படைகளோடு அடிபணியாது போராடி நந்திக்கடலோரம் நடைபெற்ற இறுதிச் சமரில் வீரகாவியமானார்.
சிறிலங்கா அரசுக்கும் அதன் இராணுவ இயந்திரத்துக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய உலகநாடுகளின் கூட்டுப்படை வலிமையையும் ஏகாதிபத்திய அரசுகளின் சூழ்ச்சித் திட்டங்களையும் எதிர்கொண்டு அனைத்து தடைகளையும் தனது பேராற்றலால் உடைத்தெறிந்து தமிழினத்தின் ஆற்றலோனாக தேசியத் தலைவர் திகழ்கின்றார்.
தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி, முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக்கொண்ட உயரிய இலட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோடு இறுதிக்கணம் வரை துணிவோடு களமாடி எமது தேசியத் தலைவர் அவர்கள் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள், வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை தமிழீழ மாவீரர் பணிமனை அறியத்தருகிறது.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின், வீரச்சாவினை உறுதிப்படுத்தி, நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயரமிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும், ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
காலம் காலமாக அடிமை வாழ்வுக்குள் சிக்குண்டு, சிதைந்து கொண்டிருந்த ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த ஒரு சூரியத் தேவனாக, இந்த நூற்றாண்டில் உலகமே வியக்கும் பல அற்புதமான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து தமிழினத்தின் அதி உச்ச வீர அடையாளமாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் திகழ்கிறார்.
வரலாற்றிலிருந்து எவராலும் அழிக்கப்பட முடியாதவாறு, எதிரியாாலும் போற்றப்படும் போரியல் அறத்துடனும் உயர்ந்த இராணுவ ஒழுக்கத்துடனும் தமிழர் மனங்களில் அவர் நிலைபெற்றுவிட்டார் என்பதால், செம்மொழியாம் எம் தாய்த் தமிழ் மொழி வாழும் காலமெல்லாம் எம்தேசத் தலைவரும் நிலைபெற்று நித்திய வாழ்வு வாழ்வார்
எமது அன்பிற்குரிய தாய்த்தமிழ் உறவுகளே!
தமிழினத்தின் கலங்கரை விளக்காக, தமிழ் மக்களை அடிமைத்தனத்திலிருந்து கரைசேர்க்கப் புறப்பட்டு, அடிமை விலங்குடைத்து, கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதி தளராது போராடிய எமது தேசியத் தலைவர் அவர்களும் மாவீரர் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழினத்தின் விடிவுக்காக, தமது உயிரை அர்ப்பணித்த எமது தேசியத் தலைவருக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரெழுச்சியோடு நெஞ்சங்களில் இருத்தி, தமிழீழப் போராட்ட வரலாற்றின் மிகப்பெரும் அடையாளமாக எமது இதயக் கோயில்களில் வைத்து பூசிக்கப்படக் கூடியவராக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களதும் மிகப்பெரும் கடமையும் பொறுப்புமாகும்.
ஆகவே, வரலாற்றில் எமக்குக் கிடைத்த பொக்கிசமான, எமது தேசத் தலைவருக்கு தலைவரின் வழியில் களமாடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம் பெயர் தாயக மற்றும் தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கிலும், நடத்தும் அதேவேளை, அனைவரும் ஒன்றிணையக் கூடிய ஐரோப்பிய நாடொன்றிலும் 2025-ஆம் ஆண்டு நடுப்பகுதியில், உலகம் போற்றும் வகையில் பேரெழுச்சியாக முன்னெடுக்கவுள்ளோம்.
எங்கள் பெருந்தலைவர் அவர்களால் கட்டமைத்து வளர்த்தெடுக்கப்பட்டு நமது கைகளில் தரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதை உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைப்புடனும் மாறிவரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தடம் மாறாது முன்னெடுத்துச் சென்று எமது இறுதி இலட்சியத்தை அடைவோமென தமிழீழத் தேசியத் தலைவர் மீதும் மாவீரர்கள் மீதும் உறுதி எடுத்துக் கொள்கிறோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எது எப்படியோ, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் இதோ வருவார்; அதோ வருவார்; வருகின்ற நேரத்தில் நிச்சயம் அவர் வருவார் என்று கடந்த 16 ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்து உலகம் முழுவதும் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த மோசடி பேர்வழிகளுக்கு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிர்ச்சியை அளித்துள்ளது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040