சேலம் சேர்வராயன் மலையில் 13-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது!

சேலம் மாவட்டம்,  சேர்வராயன் மலையின் தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கோடு ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த நீலகிரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஏற்காடு இளங்கோ, ராமகிருஷ்ணன், ராஜகார்த்திக், அரங்கம் மணி, தேவபிரகாஷ், பிரேம் குமார், அண்ணாமலை ஆகியோர் மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அரங்கம் கிராமத்தில் அ.அண்ணாமலை, வெள்ளையன், குப்புசாமி, கார்த்திக், கோவிந்தன், ஆகியோரின் உதவியோடு  களஆய்வு மேற்கொண்டதில் 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டது.

அங்கம் கிராமத்தில் உள்ள கல்லுசிலைக்காடு என்ற வனப்பகுதியில் 13–ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட  இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டது.  இந்த கற்கள், தான் சார்ந்த சமூகத்தை காக்கும் பொருட்டோ, அரசனுக்காகவோ,   ஆனிரை கவரவோ (அல்லது) ஆனிரை மீட்கவோ வேண்டி போரிடும் போது விழ்ப்புண்பட்டு மடியும் வீரனின் வீரத்தை போற்றும் வகையில் நடப்படும் வீர நடுகற்கள் ஆகும்.

முதல் நடுகல்லில் உள்ள வீரனின் இடது கையில் வில்லேந்தியும், வலது கையில் வாள் ஏந்திய நிலையில், தலை முடி உச்சி மேல்முடிந்தும், இடையில் அரையாடை மட்டும் அணிந்தபடி சமர் புரியும் நிலையில் காணப்படுகிறது. இது போரில் எதிர்த்து நின்று வீழ்ந்த பட்டான் என்பதை குறிக்கும் வகையில் வீரனின் இடுப்பில் அம்பு முன்னிருந்து பாய்ந்தது போல் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நடுகல் மூன்று அடி உயரமும், இரண்டு அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் வீரனின் இடது கையில் வில்லேந்தியவாறும்  இடையில் உள்ள வாளை வலது கையில் பிடித்திருப்பது போலவும், முடி உச்சியில் முடிந்தபடி அரையாடை அணிந்து போர் புரியும் நிலையிலும் மார்பில் அம்பு பாய்ந்துள் நிலையில் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நடுகற்களும் வீரக்கல் வகையைச் சார்ந்ததாகும்.

இந்த நடுகற்களின் அருகில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடாரிகளும், அவற்றை கூர்படுத்தும் சானக்கல்லும் இப்பகுதியில் கண்டறிவது இதுவே முதல் முறையாகும். மேலும், எருதுகட்டாம் பாறை என்ற பகுதியில் சிறு கற்களை கொண்டு அடுக்கி அதன் மேல் தன் முன்னோரில் முதன்மையான ஆணைக் குறிக்கும் வகையில் 6 அடி உயர நெடுங்கல்லும், பெண்ணைக் குறிக்கும் வகையில் 5 அடி உயர நெடுங்கல்லும் நடப்பட்டுள்ளது.  இதனை இப்பகுதி மக்கள் தம் முன்னோர்களில் முதன்மையான பாட்டன் நினைவாக நடப்பட்டுள்ளதால், பாட்டன் கல் என்று அழைக்கின்றனர். இது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச் சின்னமாகும். இவ்வகையான கல் ஏற்காட்டில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை பாட்டன் கல்லும் நடுகற்கற்களும் கண்டறிவது இதுவே முதன்முறையாகும்.

-நவீன் குமார்.

 

 

Leave a Reply