ஒழுக்கத்தையும், நேர்மையையும் உயிராக மதிக்க வேண்டும்: தொண்டர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அன்பு கட்டளை..!

நேரடி அரசியலில் களமிறங்க காத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், வழக்கமாக மற்ற அரசியல் கட்சிகளை போல ‘பத்தோடு பதினொன்று; அத்தோடு இது ஒன்று’ என்று தனது கட்சியும் இருந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்து வருகிறார்.

தமிழகத்தில் கண்ணியமான ஒரு அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதற்காக தனது ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ஒழுக்கத்தையும், நேர்மையையும் உயிராக மதிக்க வேண்டும் என்பதை தனிப்பட்ட முறையில் தொடர்ந்து போதித்து வருகிறார்.

அவற்றின் விளைவாக, ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு தற்போது சில முக்கிய விதிமுறைகளை புத்தகமாக அச்சடித்து வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விதிமுறைகளை, நமது வாசகர்களின் பார்வைக்கு இங்கு பதிவு செய்துள்ளோம்:

1.ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ, தங்களின் வாகனங்களில் மன்ற கொடியை நிரந்தரமாக பொருத்தக்கூடாது.

2.மன்ற கொடியை மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் போது மன்ற உறுப்பினர்கள் பிரச்சாரத்திற்காக வாகனங்களில் பயன்படுத்தலாம். ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்றக் கொடிகளை வாகனங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

3.இளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளே இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைக்களுக்கு ஆக்கப்பூர்வ தீர்வு காண இளைஞர் அணி, மன்றத்திற்கு துணை புரிய வேண்டும். மாற்றத்தை விரும்பும், சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர் சமூதாயத்தின் சக்தியை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்க வேண்டும்.

4. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் ரஜினி மக்கள் மன்றத்தில் இணையலாம்.

5.ஜாதி மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ, அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை.

6.மன்றக் கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ப்ளாஸ்டிக், பாலிதீன் ஆகிய பொருட்களால் செய்யப்பட்டிருக்க கூடாது.

7. மன்றப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது.

8.ஏற்கனவே மன்ற நிர்வாக பொறுப்புகள் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள பிற நேரடி உறவினர்களுக்கு மன்றத்தில் வேறு பதவிகள், பொறுப்புகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. அதாவது, ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்புகள், பதவிகள் வழங்கப்படும்.

9.பொதுமக்களிடம் குறிப்பாக முதியவர்களிடமும், பெண்களிடமும் மிகுந்த மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

10.நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

11. மன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்.

12.தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.

13.மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடக்கக்கூடாது.

14.நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்கலாமே தவிர, தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது.

15. ஏனைய உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.

16. கண்ணியம் தகாத வார்த்தைகளை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது.

17. தலைமையகத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி, பொது மக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ (அல்லது) பிற பொருளுதவியோ ஒருபோதும் திரட்டக்கூடாது.

18. தங்களால் இயன்ற நிதி உதவிகளைத் தந்து நடத்தும் நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.

19. அந்தந்த பகுதியில் தொடர்ந்து மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.

20.சட்டவிரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.

21.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.

22. சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் போது கண்ணியம் காக்க வேண்டும்.

23. மன்றத்தின் பெயரில் எந்தத் தனி நபரையும் கேலியாக சித்தரிக்கவோ, (அல்லது) விமர்சிக்கவோ கூடாது.

24. சமூக வலைத்தளங்களில் சொந்த கருத்தை வெளியிடும்போது மன்றத்தின் பெயரை பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சர்க்கரை என்று எழுதி நக்கினால் மட்டும் இனிக்காது; அதை செயலில் தான் நிரூப்பிக்க வேண்டும்.’ என்பதை நடிகர் ரஜினி காந்த் நன்கு உணர்ந்து இருக்கிறார். 

‘கற்பு எனப்படுவது யாதெனில் சொன்னச் சொல் தவறாமல் நடப்பது’-இதைப் பின்பற்ற நடிகர் ரஜினி காந்த் தயாராகி விட்டார்.

இதற்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் தயாரா இருக்கிறார்களா? என்பதை அவர்களின் எதிர்கால நடவடிக்கைகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply