கல்லூரி பேருந்து கவிழ்ந்தது!- மாணவ, மாணவிகள் படுகாயம்.

சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுக்காவிற்குட்பட்ட, வாழவந்தி கிராமத்தில் சேர்வராய்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று மாலை பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் இந்த கல்லூரி பேருந்தில் 55 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து புறப்பட்டது. பேருந்தை சீனிவாசன், (32) என்பவர் ஓட்டினார்.

பேருந்து வாழவந்தி கிராமத்தில் உள்ள கல்லூரியில் இருந்து புறப்பட்டு, ஆத்துப்பாலம் ராமர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் பிரேக் கட் ஆகியுள்ளது. இதனால் ஓட்டுனர் பேருந்தை சாலையோர மரத்தில் இடித்து நிறுத்த முயன்றுள்ளார். இருந்த போதிலும் பேருந்து மரத்தில் மோதியதில், பக்கவாட்டில் சாயந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், சேர்வாராய் கல்லூரியை சேர்ந்த கவுதமி 19, கஸ்தூரி 19, ராஜேஸ்வரி 25, பூவிழி 19, ரவிக்குமார் 28, பிரியதர்ஷினி 18, கார்த்திக் 19, ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கிருத்திகா 19, கவியரசு 21, விஜயலட்சுமி 21, ஜூலி 19, சந்தோஷ் 19, பிரதிப் 21, பூங்கொடி 18 ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டு, வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 -நே.நவீன் குமார்.

 

Leave a Reply