திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி   நடைபெற்றது.  இதில் மத்திய மண்டல டிஜஜி பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாகு உல் ஹக் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

மத்திய மண்டல டிஜஜி பாலகிருஷ்ணன், குழந்தைகள் குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது,

குழந்தைகள் எதிர்காலத் தூண்கள் என்பதை மறுக்க முடியாது. அதை பாதுகாப்பாக நல்ல முறையில் வளர்க்க வேண்டியது நமது கடமையாகும்.

குழந்தைகள் குற்ற செயல்களால் பாதிக்கப்படுவதையும், மனதளவு பாதிக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். மனதளவில் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

குழந்தைகள் ஆரோக்கியமானதாகும், சிறப்பாகவும் வளர்வதற்கு அவர்களின் குடும்பத்தின் சூழ்நிலை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பள்ளி மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி மாணவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பள்ளி தலைமையாசிரியர்கள் அலட்சியம் காட்டக்கூடாது.

நாம் முதலில் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் எதிரிகளாக இருக்கக் கூடாது. குற்றங்கள் நடப்பது தெரிந்தால் உடனடியாக அதனை சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். குற்றம் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு வெறுமனே இருக்கக்கூடாது என்றார்.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாகு உல் ஹக் தலைமை வகித்து பேசியதாவது,

நாடு முழுவதும் 18 வயதிற்கு கீழ் 43 கோடி குழந்தைகள்  உள்ளனர்இவர்களுக்கு எதிராக பேச்சு, தொடுதல், கடத்தல், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி தற்போது நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கு குற்றத்தடுப்பு விழிப்புணர்வை முதலில் பெற்றோர்கள்  சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் வீட்டில்  பேசுவது மற்றும் நடப்பதை வைத்து தான் குழந்தைகள் வளர்ச்சி இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் இந்த விழிப்புணர்வு நம் சமூகத்திற்கும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு ஆட்டோ டிரைவர்கள் பொறுப்பு அதிகமாக உள்ளது. காரணம், குழந்தைகளை பள்ளிக்  ஆட்டோ டிரைவர்களை நம்பிதான் பெற்றோர்கள் அனுப்புகின்றனர். அவர்கள் குழந்தைகளுக்கு எதிராக ஏதேனும் குற்றங்கள் நடந்தாலோ (அல்லது) தவறு நடந்தாலும் இதுகுறித்து காவல்துறைக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

குழந்தைகள் நல அலுவலர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கு 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு 5 பேர்களை உறுப்பினர்கள் கொண்ட குழு நலக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கல்வி முழுமையாக கிடைக்க வேண்டும். மேலும்,  குழந்தைகளின் தாய் (அல்லது) தந்தை இறந்தாலோ (அல்லது) இரண்டு பேரும் இறந்து விட்டாலோ, அந்த குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதுடன் அவர்கள் உரிமைகள்  பாதுகாக்கப்படும்.

மேலும், அவர்களுக்கு சமூக பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படும். இந்திய அளவில் மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் செயல்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

அதே போல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதியில் கல்வியை நிறுத்தக்கூடாது. அப்படி இடையில் நிற்பதனால் தான் பல  குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபடுவதோடு,  பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பொருளாதாரம் மற்றும் பள்ளியில் சேர்ப்பதற்கான தேவையான உதவிகளையும் செய்து கொடுப்பதாக கூறினார்.

இவ்விழாவில் திருவெறும்பூர் வட்டாட்சியர் ரபீக்அகமது, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அலுவலர் பரிமளா, திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார்  உட்பட, என்.ஐ.டி., ஜமால் முகமது கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இருந்து விளம்பர பதாகைகளை ஏந்தி, திருச்சிதஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் கடைவீதி வழியாக திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை சென்று, மீண்டும் திருவெறும்பூர் கடைவீதி வழியாக திருவெறும்பூர் வந்தடைந்தனர்.

பேரணியில் விளம்பரப் பதாகைகளை ஏந்தியும், சாலை ஓரங்களில் நின்று கொண்டிருந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும், குழந்தைகள் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கோசங்களை எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இப்பேரணியில் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர்கள் ஞானவேலன், மங்கையர்கரசி, அமுதராணி உட்பட காவல்துறையினரும், குழந்தைகள் நல ஊழியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவெறும்பூர் ஏ.எஸ்.பி பிரவீன்உமேஷ்டோங்ரே வரவேற்றார்.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாகு உல் ஹக், குழந்தைகள் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க, காவல்துறையினரும், மாணவர்களும் உறுதியேற்று கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply