முன் விரோதம் காரணமாக தலையை துண்டாக வெட்டி எடுத்து காவல் நிலையத்தில் சரண் அடைந்த அண்ணன், தம்பிகள்!

சந்துரு என்கிற சந்திரமோகன்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீரங்கம்,  கீழ வாசல், பகவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய சந்துரு என்கிற சந்திரமோகன் வயது 40, (தந்தை பெயர்:ஜோதிமணி) என்பவரை, முன் விரோதம் காரணமாக ஸ்ரீரங்கம், இரயில்வே ட்ரேக் பகுதியைச் சேர்ந்த 1.சரவணன், (தந்தை பெயர்: மாரிமுத்து) அவரது தம்பி 2.சுரேஷ், சரவணனின் சித்தப்பா மகன் 3.செல்வகுமார் ஆகிய 3 பேரும் TN45 AR.9275 காரில் பின் தொடர்ந்து வழிமறித்து சந்திரமோகனை தலையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்று ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் உடனே சரண் அடைந்தனர்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் 3 பேர் மீதும் (Cr.NO:247/2020/ IPC-302) வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்திரமோகன் மீது கொலை, கொலை மிரட்டல், வழிபறி, திருட்டு ..என்று பல குற்ற வழக்குகள் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. தனக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக சந்திரமோகன் திமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டதோடு, உதயநிதி ரசிகர் மன்ற பொறுப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

இன்று சந்திரமோகனை வழிமறித்து தலையை துண்டாக வெட்டி எடுத்த சரவணன் மீதும் குற்ற வழக்குகள் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் நடந்த பஞ்சாபிகேசன் என்பவரின் கொலை வழக்கில் சரவணனின் பெயர் 18-வது நபராக பதிவாகியுள்ளது என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்திரமோகனுக்கும், சரணவன் தரப்பினருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. சரவணனின் தம்பி சுரேஷை, சந்திரமோகன் 2 வருடங்களுக்கு முன்பு அடித்தும் உள்ளார். அன்று தொடங்கிய இவர்கள் மோதல் இன்று சந்திரமோகனின் தலையை துண்டிக்கும் அளவிற்கு வெறியாக மாறியுள்ளது.

இந்த மனித மிருகங்களின் தனிப்பட்ட கொலை வெறி, இந்த பேரிடர் காலத்தில் ஸ்ரீரங்கம் பகுதி பொது மக்களையும், காவல்துறையினரையும் நிம்மதி இழக்கச் செய்துள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

 

 

One Response

  1. MANIMARAN April 28, 2020 10:56 pm

Leave a Reply