திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழக முதலமைச்சருக்கு பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை.

பெண் வழக்கறிஞர்கள் சித்ரா, ஜெயந்திராணி .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, கோ-அபிஷேகபுரம் கோட்டம், புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை முன்பு உள்ள YMCA விளையாட்டு திடல் ஆபிஸர்ஸ் காலனி, மதுரம் காம்ப்ளக்ஸ் கட்டிட வளாகம் முன்பு, திருச்சி, காட்டூரை சேர்ந்த ரூத்ரேகா மேரி (வயது 28) உடலில் காயங்களுடன் இருந்துள்ளார்.

17 செப்டம்பர் 2020 இரவு சுமார் 11-30 மணிக்கு மேல் ஒருவர் போலீஸ் என்று கூறி ரூத் ரேகா மேரியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உள்ளார். பதினெட்டாம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு ஆட்டோவில் நான்கு நபர்கள் அலங்கோலமான நிலையில் உதட்டில் காயத்துடன் ரத்தம் வடிந்து வந்த நிலையில் கிழிந்த ஆடையுடன்
ஸ்ரீ அம்மன் மெஸ் அருகில் இறக்கி விட்டு விட்டனர்.

இறக்கி விடப்பட்ட பெண் கட்டிட வளாகம் முன்பு உள்ள படியில் அமர்ந்துள்ளார். அமர்ந்த இடம் முழுவதும் ரத்தம் இருந்துள்ளது. அம்மன் மெஸ் சமையல்காரர் கார்த்திக் இதனை பார்த்து அக்கம் பக்கத்தினருக்கும், பாய்ஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் முஹம்மது இலியாஸ்க்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த இலியாஸ் அரசு உதவி எண்ணுக்கு போன் செய்ய முயற்சித்து தொடர்பு கிடைக்காமல் போகவே “என் திருச்சி டாட்காம் மின்னிதழ்” ஆசிரியர் வெற்றிச்செல்வன் என்ற விஜயகுமார்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் திருச்சி, புத்தூர் YMCA விளையாட்டு மைதானம் முன்பு சென்று பார்த்த விஜயகுமார், வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா ஆகிய எங்களுக்கு தகவல் அளித்தார். உடனடியாக காவல் உதவி எண் 100-க்கு போன் மூலம் புகாரை பதிவு செய்தோம்.
அதே நேரத்தில் துணை ஆணையருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் ரூத் ரேகா மேரியை பாதுகாக்கும் வகையில் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா உள்ளிட்ட நாங்களும்
“என் திருச்சி டாட் காம்” ஆசிரியர் விஜயகுமார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முகமது இலியாஸ், மணிகண்டன், செய்தியாளர் இப்ராஹிம் உள்ளிட்டோர் மீட்டெடுத்தோம்.

புகார் அடிப்படையில் விசாரணைக்கு வந்த கோட்டை சரக துணை ஆணையர் ரவி ஆபிரகாம், உறையூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயகுமார், அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளர் ஆனந்தி வேதவல்லி, உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒப்படைத்தோம்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைக்காக மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் காவலர்கள் சேர்த்தனர். பாதிக்கப்பட்ட பெண் பலர் என்னை கற்பழித்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார். எனவே, கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும், இம்மாதிரியான ஆதரவற்று இருப்பிடமின்றி சாலையோரம் தங்கியிருக்கக் கூடிய பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாகாமல் பாதுகாப்புடன் பராமரித்து அவர்களின் நலன் காக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக முதலமைச்சருக்கும், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மற்றும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையருக்கும் அனுப்பியுள்ள மனுவில் திருச்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் ஜெயந்திராணி, சித்ரா ஆகியோர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பு: பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்கால நலன் கருதி அவரது படம் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது.

-எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN September 27, 2020 9:47 am

Leave a Reply