சொந்த ஊர் கொண்டு செல்ல பணம் இல்லாததால், திருச்சி அரசு மருத்துவமனையில் இறந்த தந்தையை அங்கேயே விட்டு சென்ற மகள்!-உறவினர்களின் முன்னிலையில் நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்கள்..!

பார்வதி நாதன்.

பார்வதி நாதன் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் 29 ஜனவரி 2021 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அவரது மகள் கண்ணம்மாள் என்பவரால், திருச்சிராப்பள்ளி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி 29 ஜனவரி 2021 இரவு 10 மணி அளவில் இயற்கை மரணம் அடைந்து விட்டார். தந்தை இறந்த செய்தி கேட்டு அவரது உடலை பெறாமல் அவரது மகள் கண்ணம்மாள் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இறந்த முதியவர் உடலில் தங்கம் , வெள்ளி உட்பட எவ்வித ஆபரணங்களும் இல்லாத நிலையில், அவரது உடல் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

இத்தகவல் அறிந்த திருநெல்வேலி சுந்தரர் தெருவில் வசிக்கும் உடன் பிறந்த சகோதரர் சங்கர் என்பவர், தாயார் மகாலட்சுமி, தங்கைகள் ரேவதி, கஸ்தூரி ஆகியோருடன் திருச்சி வந்தார்.

இறந்த பார்வதி நாதன் உடலை திருச்சியிலிருந்து திருநெல்வேலி கொண்டு சென்று நல்லடக்கம் செய்ய இயலாது என்றும், திருச்சியிலேயே நல்லடக்கம் செய்ய உதவி செய்யுமாறும், திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை காவல் நிலையத்தில் கேட்டுக்கொண்டதின் பேரில், திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை என்ற அமைப்பின் நிர்வாக அறங்காவலர் விஜயகுமார்க்கு 7 பிப்ரவரி 2021 ஞாயிறு அன்று மாலை
தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் அடிப்படையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா, செல்வி கீர்த்தனா, வினைசெய் அறக்கட்டளை கார்த்தி, இப்ராஹிம், இஸ்மாயில், பாலகிருஷ்ணன், ஜெய்குமார், முகமது சுல்தான், நவாப் உள்ளிட்ட தன்னார்வாலர்கள், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் இருந்த பார்வதி நாதன் உடலை, அரசு மருத்துவமனை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, ஸ்ரீரங்கம் உதவி காவல் ஆணையர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் சடலத்தைப் பெற்று, திருச்சி, அண்ணாநகர் மயானத்தில் பார்வதி நாதன் சகோதர, சகோதரிகள் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் 7 பிப்ரவரி 2021 ஞாயிறு மாலை பார்வதி நாதன் உடலை நல்லடக்கம் செய்தனர்.

இதைப் பார்க்கும்போது,

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

என்ற திருவள்ளுவப் பெருந்தகையின் குறள்தான் நமது நினைவுக்கு வருகிறது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply