அதிகரித்து வரும் கொரோனாத் தொற்று…! -நோய் பரப்பும் அரசியல்வாதிகள்…!-வேடிக்கைப் பார்க்கும் இந்திய தேர்தல் ஆணையம்.

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ”கொரோனா (COVID-19) ” தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான புதிய பாதிப்புகளில் 77.7% மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 43,846 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 27,126 பேரும், பஞ்சாபில் 2,578 பேரும், கேரளாவில் 2,078 பேரும், தமிழ்நாட்டில் 1289 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 3,09,087 பேர் கொரோனா தொற்றுக்கு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை, செங்கல்பட்டு, கோவை,திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது.

அவற்றின் புள்ளி விபரங்களை பொதுமக்களின் நலன் கருதி நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

Media-Bulletin-21-03-21-COVID-19-6-PM

இந்த லட்சணத்தில்தான் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை நினைக்கும்போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது. இதனால் அதிக எண்ணிக்கையில் ‘கொரோனா’ நோய் தொற்றுப் பரவும் ஆபத்துள்ளது.

ஆம், இந்த இக்கட்டான பேரிடர் காலக்கட்டத்தில்தான் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம் விரைவில் நிறைவடைய இருக்கிறது. அதனால்தான் மேற்படி 5 மாநிலங்களின் தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, அதற்கான நடத்தை விதிமுறைகளையும் அறிவித்துள்ளது.

அதன்படி வேட்புமனு தாக்கலின் போது 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்; வீடு வீடாக சென்று அரசியல் கட்சியினர் 5 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும்; வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டும்; அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டங்களில் ‘கொரோனா’ (COVID-19)‘ பரவல் தடுப்பு நடவடிக்கைகளை, அதாவது அனைவரும் முககவசம் அணிய வேண்டும்; சமூக இடவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று, இந்திய தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அது சரி “சர்க்கரை” என்று காகிதத்தில் எழுதி நக்கினால் இனிக்குமா என்ன?! -அதுபோலதான் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவும்.

ஆம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த விதிமுறைகளையும், உத்தரவுகளையும், ஆளும் கட்சி, எதிர்கட்சி, இதரக் கட்சிகள் உள்பட, எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை பின்பற்றவும் இல்லை; இனி பின்பற்ற போவதாகவும் தெரியவில்லை. அவ்வளவு ஏன்? புழு- பூச்சிக்கு கொடுக்கும் மரியாதையைக் கூட, இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் கொடுப்பதில்லை என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் உருமாறி காட்டுத் தீ போல பரவி வரும் ‘கொரோனா-(COVID-19)‘ மறு பரவலை, இந்திய தேர்தல் ஆணையம் எப்படி தடுக்க முடியும்?! (அல்லது) எப்படி தடுக்கப் போகிறது?!

மேலும், வேலை நிமித்தமாக வெளி ஊர்களிலும், வெளி மாநிலங்களிலும் வசித்துவரும் வாக்காளர்கள், நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு வரும்போது அவர்கள் மூலம் நோய் தொற்று பரவுமா? பரவாதா?

வாக்கு சாவடியில் சென்று வாக்களிக்க வரிசையில் நிற்கும்போது யாருக்கு நோய் தொற்று இருக்கிறது! (அல்லது) இல்லை என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்?

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள்; நாள்பட்ட நோயாளிகள் பயமின்றி வாக்கு சாவடிக்கு வாக்களிக்க வருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

கடந்த (2020) ஆண்டு இதே நாட்களில் இந்தியாவில் “கொரோனா” தொற்றுப் பரவத் தொடங்கியபோது, இப்படிதான் நாம் அலட்சியமாக இருந்தோமா?! அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம்; அப்பாவி பொது மக்களுக்கு ஒரு சட்டமா?!

தேர்தல் நடத்துவது எவ்வளவு முக்கியமோ; அதைவிட பன்மடங்கு மிக முக்கியமானது பொது மக்களின் உயிர் என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புயல், மழை, வெள்ளப் பெருக்கு, பூகம்பம், நிலச்சரிவு மற்றும் தொற்று நோய் பரவல்… இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்தபோது, பொதுத் தேர்தல்களையும், பல இடைத் தேர்தல்களையும் தற்காலிகமாக மறுத்தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த முன் உதாரணங்கள், நம் நாட்டில் ஏற்கனவே பல முறை நடைப்பெற்று இருக்கிறது.

அவ்வளவு ஏன்? கேவலம், அளவுக்கு அதிகமான பணம், பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது என்ற காரணத்திற்காக, பல தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான முழு அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையர்களுக்கு இருக்கிறது.

எனவே, இந்திய தேர்தல் ஆணையம் ‘கொரோனா-(COVID-19)’ பேரிடரை கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் நலன் கருதி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களை சுமார் 3 மாதக் காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட வேண்டும்.

இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது?! என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Media-Bulletin-21-03-21-COVID-19-6-PM

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/03/20/55106/

–Dr.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply